Breaking News

தமிழ் நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் (Tamilnadu Urban Local Bodies Ombudsman)

உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் பணிசெய்து கொண்டிருக்கும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மற்றும் அதன் இடைவிளைவான பொருட்பாடுகள் சம்பந்தமாக விசாரணை மேற்கொள்வதற்கு 2014ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம் 2014ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 13ஆம் நாள் அன்று நடைமுறைக்கு வந்தது.

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் சென்னை, கிண்டி, அண்ணாசாலை, 100 இலக்கமிட்ட கட்டிடத்தில் இயங்கிவருகிறது. தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தின் தொடர்புக்கு மின்னஞ்சல் முகவரி : ombudsmanlocal@tn.gov.in, தொலைபேசி எண் : 044-22201337, நிகரி எண். : 044-22201337.

இச்சட்டத்தின் கீழ், உள்ளாட்சி அமைப்புகளில் கீழ் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொதுப்பணியாளர்களால் தொடர்புடைய சட்டத்தின் வகை முறைக்கிணங்க நிர்வாக செயல்பணிகளை செய்துமுடிக்கையில் செய்யப்படும் ஊழல் அல்லது சீர்கேடான நிர்வாகம் அல்லது முறைகேடுகள் எதன் பேரிலுமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்வதற்கு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

“பொதுப் பணியாளர்” என்றால் தலைமையர் அல்லது துணைத் தலைமையர், மேயர் அல்லது துணை மேயர் உள்ளடங்களாக உள்ளாட்சி அமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் கீழ் பணி செய்து கொண்டிருக்கும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை உள்ளடக்கும்.

செயற்பணிகள்

முறைமன்ற நடுவர் பின்வரும் செயற்பணிகள் அனைத்தையும் அல்லது எதனையும் செய்யவேண்டும், அதாவது

i) பொதுப்பணியாளர் அல்லது உள்ளாட்சி அமைப்பொன்று ஊழல் அல்லது சீர்கேடான நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ளது என, அரசிடமிருந்து பெறப்பட்ட எழுத்து வடிவிலான அல்லது முறைமன்ற நடுவரிடம் கவனத்திற்கு வந்த முறையீடு எதனையும் விசாரணை செய்தல்

ii) நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரில், பின்வரும் முறையில் ஆணையொன்றினைப் பிறப்பித்தல், அதாவது

(a) பொதுப் பணியாளர் ஒருவரால் செய்யப்பட்டுள்ள முறைகேடு, குற்றவியல் குற்றமாக இருக்கிறவிடத்து, அந்தப் பொருட்பாடு உரிய புலனாய்வு அமைப்பிற்கு தக்க நடவடக்கைக்காக சுட்டியனுப்பப்படுதல் வேண்டும்

(b) உள்ளாட்சி அமைப்பின் நிதியத்திற்கு இழப்பினை ஏற்படுத்தியிருக்கின்ற முறைகேடாக இருக்கின்றவிடத்து, அத்தகைய முறைகேடுகளுக்கு பொறுப்பானவர்களிடமிருந்து அத்தகைய இழப்பை திரும்பப் பெறுவதற்கு ஆணையிட வேண்டும்

(c) உள்ளாட்சி அமைப்பொன்றின் அலுவலர் அல்லது பணியாளர் எவரின் கடமையும் வேண்டுமென்றே செய்த கவனமின்மையால் அல்லது மோசமாக செய்ததன் பொருட்டு முறைகேடு நடந்திருக்கின்றவிடத்து தொடர்புடைய விதிகளின்கீழ் உரிய அதிகார அமைப்பால் துறை நடவடிக்கை எடுப்பதற்காக பரிந்துரை செய்யப்பட வேண்டும்.


அதிகாரங்கள்

(1) முறைமன்ற நடுவர், விசாரணை எதனின் நோக்கத்திற்காக, 1908-ஆம் ஆண்டு உரிமையியல் நடைமுறை தொகுப்புச் சட்டத்தின்படி உரிமை வழக்கு ஒன்றினை விசாரணை செய்யும் உரிமையியல் நீதிமன்றமொன்றின் மற்றும், குறிப்பாக, பின்வரும் பொருட்பாடுகள் தொடர்பாக, அனைத்து அதிகாரங்களையும் பெற்றிருப்பார், அதாவது

(a) முறையீட்டாளரை அல்லது சாட்சி அளிப்பவர்களை வருகை தருமாறு அழைப்பதற்கு மற்றும் கட்டாயப்படுத்துவதற்கு மற்றும் அவரை உறுதிமொழியின் பேரில் விசாரிப்பதற்கு

(b) தொடர்புடைய மற்றும் தேவைப்படும் ஆவணம் எதனையும் கண்டுபிடிப்பதற்கு மற்றும் முன்னிலைப் படுத்துமாறு கேட்பதற்கு

(c) உறுதி ஆவணங்களின் பேரில் சான்றினைப் பெறுவதற்கு

(d) பொதுப் பதிவுரு எதனையும், அல்லது அதனின் நகலை நீதிமன்றம் அல்லது அலுவலகம் எதிலிருந்தும் கேட்டுப் பெறுவதற்கு

(e) சாட்சி அளிப்பவரை மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக பணிப்பாணையை வழங்குதல் மற்றும்

(f) வகுத்துரைக்கப்படலாகிறவாறான பொருட்பாடு எதுவும்


(2) முறைமன்ற நடுவர் முறையீடு ஒன்றில் அடங்கியுள்ள குற்றச்சாட்டில் பொருள் எதுவுமில்லை என்று கண்டுணர்கிறவிடத்து அவர் ஆணையொன்றினால், செலவினமாகக் குறிப்பிடப்பட்டுள்ள தொகையொன்றினை எதிர் தரப்பினருக்கு வழங்குமாறு முறையீட்டாளரைப் பணிக்கலாம்.

(3) எழுத்து வடிவிலான முறையீடு ஒன்றில் அடங்கியுள்ள குற்றச்சாட்டில் உள்ளாட்சி அமைப்பு நிதியத்தின் இழப்பு பற்றியதாக இருக்கிறவிடத்து, முறைமன்ற நடுவர், விசாரணையின் போது, சான்றினை சேகரித்து இழப்பினை நிச்சயிக்கலாம் மற்றும் அந்த இழப்பை ஏற்படுத்தியதற்கு பொறுப்பாகவுள்ள நபரிடமிருந்து அந்தத் தொகையினைப் பெறுவதற்கு அவருடைய ஆணையில் பணிக்கலாம்.

(4) (2)-ஆம் உட்பிரிவின்படி அல்லது (3)-ஆம் உட்பிரிவின்படி முறைமன்ற நடுவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையின்படி செலுத்தத்தக்க தொகை, அவரால் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள் செலுத்தப்படாமல் இருக்கிறதென்றால், அந்தத்தொகை, 1864-ஆம் ஆண்டு தமிழ்நாடு வருவாய் வசூலித்தல் சட்டத்தின்படி நிலவருவாய் பாக்கி இருந்தாற்போன்று வசூலிக்கப்படுதல் வேண்டும்.


அதிகாரப்பூர்வ இணையதளம் :https://www.tnlbo.tn.gov.in/index.html

 





























No comments

Thank you for your comments