வேலூர் சங்கரன்பாளையத்தில் விதிமீறிய வணிக கட்டிடம்: உள்ளூர் திட்ட குழுமம் கடிதத்தை உதாசீனம் செய்யும் மாநகராட்சி?
வேலூர், மார்ச் 7-
வேலூர் மாநகராட்சி, 3-வது மண்டலத்தில், ஆரணி சாலை, சங்கரன் பாளையத்தில் வணிக வளாகம் மற்றும் தங்கும் விடுதியாக இயங்கி வரும் கட்டிடம் ஒன்று Tamil Nadu Town and Country Planning Act, 1971-ன் விதியின் படி விதிமீறல் உள்ளது என்றும், முறையான அனுமதி பெறாமலும், பல லட்சம் மாநகராட்சிக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வேலூர் மாநகராட்சி பகுதியில் சில வணிக கட்டிடங்கள் முறையான அனுமதியின்றியும், போதுமான “பார்க்கிங்”, பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் கட்டப்படுவது தற்போது அதிகரித்து வருகிறது. மாநகராட்சி அனுமதித்த வரைபடம் அடிப்படையில் பெரும்பாலான வணிக கட்டிடங்கள் கட்டப்படுவதில்லை. மேலும், கட்டிடம் முழுவதுக்கும் அனுமதி பெறுவதில்லை. இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் மாநகராட்சிக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால் ஒவ்வொரு பாமர மக்களின் தலையில்தான் இந்த வரி சுமை கூடுகிறது...
ஆரணி சாலை, சங்கரன் பாளையத்தில் வணிக வளாகம் மற்றும் தங்கும் விடுதியாக இயங்கி வரும் கட்டிடம் ஒன்று Tamil Nadu Town and Country Planning Act, 1971-ன் விதியின் படி விதிமீறல் உள்ளது என்றும், முறையான அனுமதி பெறாமலும், பல லட்சம் மாநகராட்சிக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், தொண்டு நிறுவனம் ஒன்று, வேலூர் மாநகராட்சியிடம் ஆர்.டி.ஐ.-தகவல் கோரியது.
இந்த கட்டிடம் குறித்து வேலூர் மாநகராட்சி அளித்துள்ள ஆர்.டி.ஐ. தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தங்கும் விடுதி மற்றும் வணிக வளாகங்களாகவும் செயல்பட்டு வரும் அந்த கட்டிடம் சுமார் 40 அடி அகலம், 150 அடி நீளம் என மொத்தம் சுமார் 6000 ச.அடிகள் கொண்ட நிலப்பரப்பில் 3 தளங்களை கொண்டுள்ளது என கூறப்படுகிறது. இந்த நிலத்தில் சுமார் 13 ஆயிரம் சதுரடியில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இந்த கட்டிடத்துக்கு வரி விதிப்பு குறித்து மாநகராட்சி அளித்துள்ள ஆர்.டி.ஐ.(RTI) தகவலின் படி,
இந்த கட்டிடத்திற்கு இரு வரிவிதிப்புகள் உள்ளன. இவற்றிற்கான அரையாண்டுக்கு வரித்தொகை ரூ.13,968/- மற்றும் ரூ.5,312/- (SUC சேர்ந்து)” என வேலூர் மாநகராட்சி சார்பில் பொது தகவல் அலுவலர் (ம) கண்காணிப்பாளர், மண்டலம்-3 அவர்களால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சில கேள்விகளுக்கு கட்டிட உரிமையாளருக்கு சாதகமாக பதில் அளிக்க இயலாது என மறுக்கப்பட்டுள்ளது. (உபி-ல் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்விகளுக்கு பதிலளிக்காத அரசு அதிகாரிகளுக்கு மாநில தகவல் ஆணையம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்)
சுமார் 13 ஆயிரம் சதுரடியில் உள்ள வணிக கட்டிடத்துக்கு விதிக்கப்பட்ட வரி தொகை சரிதான என்ற கேள்வி நம்முன்னே எழுகிறது? மாநகராட்சி அதிகாரிகள் கண்களுக்கு இது தெரியவில்லையா... இதனால் ஒவ்வொரு ஆண்டும் இந்த கட்டிடத்தில் மட்டும் பல லட்சங்களில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எவ்வளவு என்பதை கணக்கீட்டுகொள்ளுங்கள்.......
வரி கணக்கீடு இதுதான் என்றால்.. அனுமதி பெற்ற சதுரடிகள் எவ்வளவு என்ற கேள்வியும் இங்கே நம் முன் எழுகின்றது. விதிமீறி முறையாக(முழுமையாக) கட்டிடத்துக்கு அனுமதி பெறாமல் இந்த கட்டிடம் இயங்கி வருகிறது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது... கட்டிடத்தை ஆய்வு செய்ய மாநகராட்சியில் அதிகாரிகள் இல்லையா என்ற அடுக்கடுக்கான கேள்விகள் நம்முன்னே எழுகின்றன.
வேலூர் மாநகராட்சி அலுவலர்கள் விதித்துள்ள வரிவிதிப்பு கணக்கீடு சரிதானா? என்று பொதுமக்கள் பார்வைக்கு இங்கே..
அரசு வழங்கி இருக்கும் குடிசை மாற்று வாரியம் குடியிருப்புக்கு வேலூர் மாநகராட்சி சொத்து வரி ரூ.2,720/-விதித்துள்ளது. மேலும் உடனடியாக கட்டவேண்டும், இல்லையென்றால் கையகப்படுத்தி விற்பனை செய்யப்படும் என நோட்டீஸ் வழங்கும் மாநகராட்சிக்கு, கண்முன்னே காட்சியாக விளங்கும் சுமார் 13 ஆயிரம் சதுரடிக்கு மேல் கொண்ட வணிக வளாகம் மற்றும் தங்கும் விடுதி ஒன்றிற்கு வரி ரூ.19,280 (SUC)) சேர்த்து விதிக்கப்பட்டுள்ளது எவ்வாறு..? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இந்த வரிவிதிப்பே கட்டிடம் முறையான அனுமதியின்றி இயங்கி வருகிறாதா என்ற கேள்வி மறைந்துள்ளது...
அதுமட்டுமின்றி தொண்டு நிறுவனம் ஒன்று அளித்துள்ள புகாரின் பேரில், நகர் ஊரமைப்புச் சட்டம் பிரிவு 56, 57-ன் கீழ் உரிய அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேலூர் மாநகராட்சிக்கு, வேலூர் மாவட்ட நகர் ஊரமைப்பு இணை இயக்குநர் கேட்டுக்கொண்டு கடிதம் அனுப்பினர். கடிதம் ந.க.எண்2653/2023 தேதி: 22.12.2023 ஆகும்.
ஆனால் இன்று வரையில், நடவடிக்கை எடுக்காமல் உதாசீனம் செய்கிறதா மாநகராட்சி? என்ற கேள்வி எழுகிறது.
இதுபோன்று வேலூர் மாநகராட்சி பகுதியில் பல வணிக வளாக கட்டிடங்கள் விதிமீறியும், மாநகராட்சி வரிவிதிப்பில் முறைகேடும் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மாநகராட்சி அலுவலர்கள் உடன்படுவதாகவும் தொடர் குற்றச்சாட்டு உள்ளது.
மேலும், வீடுகளுக்கான வரி விதிப்பில் கறார் காட்டுகின்றனர் என்றும், பெருமுதலாளிகளுக்கு சாமரம் வீசுகின்றனர் சில மாநகராட்சி அலுவலர்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்தவண்ணம் உள்ளது.
சிலர் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்த மாநகராட்சிக்கு அவப்பெயரே ஏற்படுகின்றன. இனியாவது, மக்களுக்காக என மாநகராட்சி செயல்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments
Thank you for your comments