வேலூர் மாநகராட்சியில் அனுமதியின்றி அதிகரித்து வரும் ஹோர்டிங் பலகைகள்-எல்.இ.டி. திரைகள்
வேலூர், பிப்.5-
வேலூர் மாநகராட்சி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், அனுமதியின்றி விளம்பரப் பலகைகள் Hoarding Board Advertisement) வைப்பது அதிகரித்துள்ளது... அவற்றை அகற்ற வேண்டிய மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றன. அனுமதியின்றி வைக்கப்படும் பிரமாண்ட விளம்பரப் பலகைகளால், வாகன ஓட்டிகளின் கவனம் திரும்பி விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையிலும் மாவட்ட நிர்வாகம் மவுனம் காக்கின்றன... அதிகாரத்துக்கு அடிப்பணிகிறதா நிர்வாகம் என கேள்வி எழுகின்றது...
தேசிய நெடுஞ்சாலைகளில், சாலையின் ஓரத்திலிருந்து 10 மீட்டர் தூரத்துக்கும், மாநில நெடுஞ்சாலைகளில் 10 அடி தூரத்துக்கும், சாலை சந்திப்புகளிலிருந்து 100 மீட்டர் தூரத்துக்கும் எந்தவொரு விளம்பரத்தையும் வைக்கக்கூடாது என்று, விதிமுறைகள் உள்ளன.
சாலையோரங்களில் வாகன ஓட்டிகளின் கவனத்தைத் திசை திருப்பும் வகையில், எந்த விளம்பரமும் இருக்கக்கூடாது என்கிறது, இந்திய சாலைக் குழும (I.R.C.) விதி. சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட்டுகளில் பல்வேறு வழக்குகளில் வழங்கப்பட்டுள்ள, தீர்ப்புகளும் இதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளன. இந்த வகையில், சாலையோரங்களில் எந்த விதமான டிஜிட்டல் விளம்பரமும் வைப்பதற்கு, விதிமுறைகள் அனுமதிப்பதே இல்லை.
இதனால்தான், தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறையும், மாநில நெடுஞ்சாலைத்துறையும் தங்களுடைய ரோடுகளில், எந்தவொரு விளம்பரத்தையும் அனுமதிப்பதில்லை. எந்த சாலையில் விளம்பரப் பலகை வைக்கப்படுகிறதோ, அந்த ரோடு எந்தத் துறைக்குச் சொந்தமானதோ, அந்தத் துறையிடம் தடையின்மைச் சான்று பெறவேண்டும். அதன் அடிப்படையில்தான், அந்த விளம்பரப் பலகைக்கு மாவட்ட கலெக்டர் அனுமதி தருவார். அவ்வாறு அனுமதி பெற்ற பின்பே, அந்த விளம்பரத்தை நிறுவுவதற்கு, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புக்கு உரிய கட்டணமும், வரியும் செலுத்த வேண்டும். ஆனால் சமீபகாலமாக இதுபோன்று எந்த தடையின்மைச் சான்றும், அனுமதியும் பெறாமலே இஷ்டம்போல விளம்பரப் பலகைகள் வைக்கப்படுகின்றன.
இதற்கு வேலூர் மாநகராட்சியும் விதிவிலக்கல்ல... வேலூர் மாநகராட்சி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், அனுமதியின்றி விளம்பரப் பலகைகள் வைப்பது அதிகரித்துள்ளது... அவற்றை அகற்ற வேண்டிய மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றன. அனுமதியின்றி வைக்கப்படும் பிரமாண்ட விளம்பரப் பலகைகளால், வாகன ஓட்டிகளின் கவனம் திரும்பி விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது. இந்நிலையிலும் மாவட்ட நிர்வாகமும் மவுனம் காக்கின்றன... அதிகாரத்துக்கு அடிப்பணிகிறதா நிர்வாகம் என கேள்வி எழுகின்றது...
வேலூர் மாநகராட்சியில், சாலைகள் தனியார் இடங்களில், அரசின் முறையான அனுமதியின்றி, விதிகளை மீறி ஏராளமான விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த விளம்பரங்கள் அனைத்துமே, ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகளை மீறுவதோடு, வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பி, விபத்துக்கு அடிகோலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
அனுமதியற்ற இந்த விளம்பரங்களை அகற்ற வேண்டுமென்று, மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு கொடுத்தாலும், அகற்ற வேண்டிய பொறுப்பு, வேலூர் மாநகராட்சி உள்ளிட்ட அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கே உள்ளது. அவை அகற்றப்படாதபட்சத்தில், ஐகோர்ட் உத்தரவுகளை அமல்படுத்தும் பொறுப்பிலுள்ள மாவட்ட நிர்வாகம், மேல் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
பிரமாண்டமான இந்த விளம்பரங்களால், பல கோடி ரூபாய் வருவாய் கிடைப்பதால், மாவட்ட, மாநகராட்சி நிர்வாகத்திலுள்ள பல அதிகாரிகளுக்கும், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும், அலுவலர்களுக்கும் பல லட்சங்களில் பங்கு செல்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் உள்ளன. அதற்கேற்ப, மாவட்ட நிர்வாகமும் இதுகுறித்து பெயரளவுக்கு அறிவிப்பை வெளியிடுவதோடு, தன் பணியை நிறுத்திக் கொள்வது வாடிக்கையாக உள்ளது.
சாலை ஓரங்களில், இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்காத காரணத்தால், நாளுக்கு நாள் புதிய விளம்பரப் பலகைகளும் முளைத்து வருகின்றன. பல கட்டடங்களில் விளம்பரப் பலகைகள் வைத்து, தொடர்பு எண்கள் தரப்பட்டுள்ளன.
சாலைகள் சந்திப்புகளிலும், சாலை ஓரங்களிலும், மாநகராட்சிப் பகுதிகளிலும் அதிகமான விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்காத காரணத்தால், சமீபகாலமாக முக்கிய சாலைகளை ஒட்டியுள்ள இடங்களிலும், விளம்பரப் பலகைகள் வைப்பது பல மடங்கு அதிகரித்துள்ளது.
சாலை ஓரங்களில் உள்ள தனியார் இடங்களில், வைக்கப்படும் விளம்பரப் பலகைகளுக்கு சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளரிடம் வாடகை அல்லது குத்தகை ஒப்பந்தம் போடப்பட்டாலும், அந்த விளம்பரங்களுக்கு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டுமென்பது அரசின் விதிமுறை. அதேபோல, சாலையை ஒட்டியுள்ள இடங்களில் விளம்பர போர்டு வைக்கவும் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறுவது அவசியம். இதை ஐகோர்ட்டு பல தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தியாவிலேயே தமிழகம் விபத்துக்களில் முதலிடம் வகிப்பதற்கு, இத்தகைய விளம்பரப் பலகைகளும் காரணம்.
மாவட்ட நிர்வாகம் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். விபத்துக்கு விதை போடும், இந்த விளம்பரங்களை உடனே அகற்ற உத்தரவிட்டு, விதிமீறல் வியாபாரத்துக்கு, தமிழக அரசு முற்றுப்புள்ளி வைப்பது அவசர அவசியம்.
வேலூர் மாநகராட்சியில் விளம்பர பலகைகள் வைக்கும் உரிமம் வழங்கும் டெண்டர் கடந்த 15 ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே (2012ல்) கோரப்பட்டுள்ளது என்று ஆர்டிஐ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்டிஐ தகவல் புள்ளி விவரம்
வேலூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் அனுமதி பெற்றுள்ள மொத்த விளம்பர பலகைகள் 372 ஆகும். அதில் மின் ஒளி விளம்பர பலகைகள் மொத்தம் 285 என்று வேலூர் மாநகராட்சி அன்மையில் அளித்துள்ள ஆர்டிஐ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வேலூர் மாநகராட்சியில் மின் ஒளி விளம்பர பலகைகள் 285&க்கும் அதிகமாக உள்ளது. சுமார் 1000&க்கும் மேல் உள்ளது.
அப்படியென்றால் அதற்கான மின்சாரம் எதனடிப்படையில் பயன்படுத்துப்படுகின்றன. மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்ற கேள்வி இங்கே எழுகின்றது. இல்லை மின்சாரம் திருட்டு அரங்கேறுகிறதா... மாநகராட்சியோடு மின்சாரத்துறையும் இங்கே மவுனம் காக்கின்றதா... என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுகின்றது.
இதனால் மாநகராட்சிக்கு பெரும் வருமான இழப்பு ஏற்படுகின்றது. அதோடு மின்சார துறைக்கும் வருமானம் இழப்பு ஏற்படுவதோடு அப்பாவி மக்களின் தலைகளில் சுமை கூடுகிறது. பொதுமக்களின் வரிபணம் வீணாகிறது.
அதேபோன்று வேலூர் மாநகராட்சியில் 2 X 4, 4X8, 10 X 15, 12 X 24 என்ற அளவில் அனுமதி வழங்கப்படுவதாக ஆர்டிஐ தகவல் தெரிவிக்கின்றது.
ஆனால் வேலூர் மாநகராட்சியில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் விதிமுறைகளை மீறி குறிப்பிட்ட அளவில் இல்லாமல் பெரிய அளவில்(Extra Size) உள்ளது என்பது தெள்ளதெளிவாக தெரிகிறது.
இவ்வாறு பல்வேறு விதிமுறைகள் மீறல் நடைபெற்றுவருகிறது வெட்ட வெளிச்சமாக தெரிவிகிறது. இருப்பினும் மாவட்ட நிர்வாகமும்&மாநகராட்சி நிர்வாகமும் கண்டும் காணாமல் இருப்பது ஏன்...
பிரமாண்டமான இந்த விளம்பரங்களால், பல கோடி ரூபாய் வருவாய் கிடைப்பதால், மாவட்ட, மாநகராட்சி நிர்வாகத்திலுள்ள பல அதிகாரிகளுக்கும், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும், அலுவலர்களுக்கும் பங்கு செல்வதால், கண்டும் காணாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அனுமதி இல்லாமல் விளம்பரங்கள் வைத்துள்ள நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
எல்.இ.டி. திரை
இதுமட்டுமின்றி போக்குவரத்து சிக்னல்களின் எல்.இ.டி. திரை வைத்து விளம்பர செய்யப்படுகிறது. இதனால் போக்குவரத்து சிக்னல்களில் பொதுமக்கள் கவனம் திசை திரும்புகிறது. இதுகுறித்து ஆர்டிஐ தகவலில் மாநகராட்சி தெரிவித்துள்ள தகவல் பேரதிர்ச்சி அளிக்கின்றது. அதாவது, “எல்.இ.டி திரை”&க்கு அனுமதி வழக்கப்படவில்லை என்று தகவல் தெரிவிக்கின்றன.
மேலும் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் நேரடியாக கேட்டபோதும் அனுமதியின்றிதான் உள்ளது என்று கூறினர். இவ்வாறு பதில் அளிக்கும் அவர்கள் ஏன் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. தயக்கம் காட்டுவது ஏன்? அப்படியென்றால் விளம்பர நிறுவனங்களிடமிருந்து மாதந்தோறும் அவர்களுக்கு பங்கு தொகை செல்கின்றது என்பதை ஒப்புக்கொள்கிறார்களா?
இந்த விளம்பர நிறுவனங்களுக்கு துணையாய் இருந்து செயல்பட்டது முன்பு இருந்த முக்கிய அதிகாரி ஒருவர் என்று மாநகராட்சி வட்டாரத்தில் பேச்சுதான்.. அதுவும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு மட்டும் சாதகமாகவும் ஏகபோகமாக (Monopoly) உருவாக காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த அதிகாரியை எங்கு பணியிட மாற்றம் செய்தாலும் எப்படியாவது திரும்பவும் வேலூர் மாநகராட்சியை வந்தடைந்துவிடுவார். சில மாதங்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்ட அவர், மீண்டும் வேலூருக்கு பணியிட மாற்றம் பெற்று வர மேலிடத்தில் பல லட்சங்களில் செலவு செய்து முயற்சித்து வருவதாக மாநகராட்சி வட்டராங்களில் பரவலாக பேசப்படுகிறது.
அதுமட்டுமின்றி தற்போது வேலூர் மாநகராட்சியில் அவர் இடத்தில் பணிபுரியும் நபரும் அவருக்கு சளைத்தவர் இல்லையென்று விளம்பர நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து பல லட்சங்களை சம்பாதித்து வருவதாக பேசப்படுகிறது. சமீபத்தில் சில விளம்பர நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி லகரங்களில் கையூட்டு பெற்றுள்ளார் என்று மாநகராட்சி வட்டராங்களில் கிசுகிசுக்கின்றனர். அவருக்கு மாநகராட்சியில் ஒரு அதிகாரி கூட்டு சேர்ந்து செயல்பட்டுவருகின்றனர்.
இதன் மீது தற்போது பொறுப்பேற்றுள்ள மாவட்ட கலெக்டர் வே. இரா. சுப்புலெட்சுமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், அத்துமீறியுள்ள விளம்பரங்களை அகற்றவும், நடவடிக்கை எடுக்காத மாநகராட்சியின் மீது, சமூக ஆர்வலர்கள் தமிழ் நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் புகார் அளிக்க இருப்பதாகவம் தகவல் தெரிவித்துள்ளனர்.

No comments
Thank you for your comments