Breaking News

பரந்தூர் போராளியான ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் திவ்யா தற்கொலை

காஞ்சிபுரம் :

ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திவ்யா (35) திங்கள்கிழமை மாலை திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். இவர் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக 9 முறை ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் இணைந்து தீர்மானம் நிறைவேற்றியவர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

சென்னையின் 2வது விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் அமைகிறது. இதற்காக பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து 5 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. 

இதில் ஏகனாபுரம் உள்ளிட்ட சில கிராமங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளன. இதனால் இந்த கிராமத்தை மையாக வைத்து 2 ஆண்டுகளாக தீவிரமாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டத்தில் பங்கேற்று வந்தவர் கணபதி. இவரது மனைவி திவ்யா (35). திவ்யாவும் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக 9 முறை தீர்மானம் நிறைவேற்ற உதவியாக இருந்தவர். 

தூக்கிட்டு தற்கொலை

இந்நிலையில் திங்கள்கிழமை திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் ஏற்கெனவே உடல் நலம் குன்றி இருந்ததாகவும், குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது.

பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் எடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்படுவதால் திவ்யா மன உளைச்சலில் இருந்ததாகவும், இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் போராட்டக் குழு அறிவித்துள்ளது. இதனால் இந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொண்ட திவ்யாவுக்கு இரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

போலீஸார் மறுப்பு

“திவ்யா குடும்ப பிரச்சினை காரணமாகவே, தற்கொலை செய்து கொண்டார். அவர் விமான நிலையத் திட்டத்தை எதிர்த்து தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவர் அதுபோல் கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை. போலீஸார் விசாரணையில் குடும்ப பிரச்சினை என்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளோம்,” என்றனர்.


No comments

Thank you for your comments