கர்நாடக மாநிலம் மேலகோட்டை செல்வநாராயணப் பெருமாள் கோயிலுக்கு வஸ்திர மரியாதை
காஞ்சிபுரம், நவ.10:
காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் வைகுண்டப் பெருமாள் கோயிலில் இருந்து கர்நாடக மாநிலம் மேலகோட்டை செல்வ நாராயணப் பெருமாள் ஆலயத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வஸ்திரங்கள் எடுத்துச் சென்று மரியாதை செய்யப்பட்டது.
தமிழக திருக்கோயில்கள் பிற மாநிலங்களில் உள்ள திருக்கோயில்களோடு நல்லிணக்கம் மேம்பட வஸ்திர மரியாதை செய்யும் அறிவிப்பு அரசால் அண்மையில் வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் வைகுண்டப் பெருமாள் கோயிலில் இருந்த அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, கோயில் செயல் அலுவலர் ராஜா இளம்பெருவழுதி,ஆய்வாளர் சுரேஷ்குமார் ஆகியோர் வஸ்திர மரியாதை எடுத்து சென்றனர்.
கர்நாடக மாநிலம் மேலக்கோட்டை பகுதியில் உள்ள செல்வநாராயணப் பெருமாள் கோயில் நிர்வாகிகளிடம் வஸ்திரத்தை சமர்ப்பித்தனர்.
இந்நிகழ்வில் அறநிலையத்துறை அலுவலர்கள்,வைகுண்டப் பெருமாள் கோயில் பணயாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments