Breaking News

தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் எச்சரிக்கை

காஞ்சிபுரம், அக்.1:

தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அறிஞர் அண்ணா அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் நூலகம், காஞ்சிபுரம் ராணி அண்ணாத்துரை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியனவற்றில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் வட்டாரக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு சென்று பள்ளிக்கு வராமல் இடைநின்ற மாணவர்களைப் பற்றிய விபரங்களை கேட்டறிந்து அவர்களது வீடுகளுக்கு தொலைபேசி மூலம் பள்ளிக்கு வராததற்கான காரணம் குறித்தும் கேட்டறிந்தார்.அவசியம் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

காஞ்சிபுரம் ராணி அண்ணாத்துரை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் கூறியது, மழைக்காலம் தொடங்கி விட்டதால் கீழ் தளத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அறை இருந்தால் அதை உடனடியாக முதல் தளத்துக்கு மாற்ற வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஏனெனில் மழைக்காலங்களில் தண்ணீர் தலைமை ஆசிரியர் அறைக்குள் வந்து விட்டால் முக்கியமான ஆவணங்கள் தண்ணீரில் போய் விடும் வாய்ப்பு உள்ளது.

பள்ளிகளில் உள்ள கிணறுகள் முறையாக மூடப்பட்டிருக்க வேண்டும்.பள்ளிகளில் உள்ள எலெக்டிரிக் சுவிச் பலகைகளை மழைக்காலங்களில் மிகவும் கவனமாக கையாள வேண்டும்.பள்ளிச் சுவர்களில் மழைநீர் ஒழுகல் இருப்பின் அதை அந்தந்த நகராட்சி கவுன்சிலர்கள்,அலுவலர்கள் மூலமாக சரி செய்யுமாறும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்.இது போன்ற குறைகளை ஆசிரியர்கள் சரி செய்து மழைக்காலத்திற்கேற்றவாறு தயார் நிலையில் இருக்க வேண்டும்.

கல்வியில் பின்தங்கிய 44 ஒன்றியங்களை தேர்வு செய்திருக்கிறோம்.பின்தங்கியதற்கான காரணங்களை ஆய்வு செய்து உரிய திட்டங்களை தீட்டுவது தான் அரசாங்கத்தின் கடமையாகும்.கல்வியில் பின்தங்கிய பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கென கையேடு தயாரித்து வழங்கியிருப்பதோடு ஆசிரியர்களுக்கும் பயிற்சியளிக்கிறோம். இதன் மூலமாக மட்டுமே 2.5 0லட்சம் மாணவர்கள் பலனடைந்துள்ளனர்.

இத்திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் விரிவு படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் அரசு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக வாட்ஸ்அப் அல்லது தொலைபேசி மூலமாக புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ரூ.400 கோடி மதிப்பில் வகுப்பறைகள்,கழிப்பறைகள்,சுற்றுச்சுவர்கள் என மொத்தம் 1962 கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

ஆய்வின் போது காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.வெற்றிச் செல்வி,எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் உட்பட கல்வித்துறை அலுவலர்களும் உடன் இருந்தனர்.

No comments

Thank you for your comments