Breaking News

மிகப்பெரிய ஜனநாயக சுடரொளி பேரறிஞர் அண்ணா - மதிமுக மல்லை சத்யா பேச்சு

இன்று (15-09-24)  சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் நினைவில் வாழும் தியாக வேங்கை அண்ணன் திரு கணேசமூர்த்தி அரங்கில் நடைபெற்ற தமிழ்த் தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்களின் 116வது பிறந்தநாள் விழா நிறைவரங்கம் வட சென்னை கி மாவட்ட கழக செயலாளர் சு ஜீவன் MC அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாழ்த்தரங்கில் திராவிட ரத்னா தமிழினக் காவலர் தலைவர் திரு வைகோ எம்பி முதன்மை செயலாளர் சகோதரர் திரு துரை வைகோ எம்பி மற்றும் செந்திலதிபன்  ஏ.கே மணி ஆடுதுறை முருகன் ராஜேந்திரன் டாக்டர் ரொகையா வழக்கறிஞர் சைதை சுப்பிரமணி MC டி சி ராஜேந்திரன் கழக குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 



மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா உரையாற்றியதாவது

புயலின் முகங்களே பூகம்பத்தின் விதைகளே வணக்கம்  

நலம் வாழிய நலனே 

ஆயிரம் முகங்கள் கடந்து சென்றாலும் ஒரு சில சந்திப்புகள் மட்டுமே அர்த்தம் உள்ளதாக இருக்கும் என்பதைப் போன்று ஆண்டுக்கு ஒரு முறை உங்கள் அனைவரின் திருமுகம் காணவும் ஒரு சேர சந்தித்து பேசுவதற்கான வாய்ப்பாக பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் விழா அமைகிறது 

நாம் கடந்து வந்த 30 ஆண்டுகால இலட்சியப் பயணத்தை அரிமா நோக்குடன் திரும்பிப் பார்க்கின்றேன் 

இந்த 30 ஆண்டுகால இடர்மிகுந்த இலட்சியப் பயணத்தில் இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க முன்வைத்த கால் முள் மீது வைத்திட்ட போதும் பின் வாங்கிடமால் காட்டாறுகளை கடந்து நெருப்பாற்றில் நீந்தி இழப்புகள் சோதனைகள் வெற்றிகள் தோல்விகள் என்று தலைவர் வைகோ அவர்கள் தலைமையில் 30 ஆண்டுகள் கழித்து 31 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றோம் இதைப் போன்ற சோதனைகளை வேறு எந்த கட்சியும் சந்தித்து இருந்தால் இருந்த இடம் தெரியாமல் மறைந்து காணமல் போயிருக்கும் 

மாயமான்கள் இந்திர ஜால வித்தையைக் காட்டிய போதும் சலனங்களுக்கும் சபலங்களுக்கும் ஆட்டாமல் தலைவர் வைகோ அவர்களின் மீது வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை  உயர்ந்த இலட்சியங்களுக்காக உருவாக்கப் பட்ட இயக்கம் ஒப்பற்ற தலைவர் வைகோ அவர்களின் தலைமையில் தன் இலக்கை சென்று அடையும் வரை இழப்புகளைப் பற்றி கவலைப் படாமல் போராடித்தான் ஆகவேண்டும் 

மறுமலர்ச்சி திமுகவின் பயணம் நெடும் பயணம் திராவிட இயக்க பிதாமகன்களான டாக்டர் நடேசனார் சர் பிட்டி தியாகராயர் டி எம் நாயர் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா டாக்டர் கலைஞர் ஆகியோர் வகுதுத்தந்த பாதை தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகள் மீட்பு சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் பேணிப் பாதுகாத்து ஆதிக்கம் மற்ற சமத்துவ சமுதாயம் மலர்ந்து சமூகநீதி மொழிவுரிமை பண்பாடு கலாச்சாரம் மதச்சார்பின்மை தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்களுக்கு தனித் தமிழ் ஈழம் அமைய பாடுபடுவது புலம் பெயர் இந்திய வம்சாவளி தமிழர்களின் நலன் காக்க குரல் கொடுத்து சமரசம் இல்லாமல் போராடுவதால்

மறுமலர்ச்சி திமுக இன்றும் அதே உயிரோட்டதோடு இருக்கிறது 

கடந்த ஆகஸ்ட் மாதம் 10 தேதி கத்தோலிக்க திருச்சபையின் செங்கல்பட்டு மறைமாவட்ட பேராயர் மேதகு டாக்டர் நீதிநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்ற அழைக்கப் பட்டேன் அதற்காக  பழைய ஏற்பாட்டை படித்த போது ஒரு செய்தி  ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு இருந்த யூதன் மோசே முன் முட்செடியில் கடவுள் நெருப்பு வடிவத்தில் தோன்றி நீ கடவுளின் தூதராக தேர்வு செய்யபட்டு உள்ளாய் எகிப்து தேசத்தில் 430 ஆண்டுகள் அடிமைப்பட்டு கிடக்கும் இஸ்ரவேல மக்களை மீட்டு தேனாறும் பாலாறும் பாய்ந்து ஓடும் ஆசிர்வதிக்கப்பட்ட பூமிக்கு அழைத்துச் செல் என்ற கட்டளையை ஏற்று எகிப்து சென்ற கடவுளின் அற்புதங்களை செய்து காட்டி பாராவோன் மன்னனையும் இஸ்ரவேல் மக்களை நம்ப வைத்து அவர்களை விடுவித்து கட்டந்தரையில் பாலைவனத்தில் ஒரு கட்டத்தில் பின் தொடர்ந்து வரும் மன்னன் பாராவோன் படையிடம் இருந்து தப்பிக்க முடியாமல் செங்கடலில் இஸ்ரவேலர்கள் ஜல சமாதியாக இருந்த நிலையில் செங்கடலைப் பிளந்து இஸ்ரவேலர்களை கரைக்காப்பால் சேர்க்க வைத்து பாராவோன் படைகளை செங்கடலில் ஜலசமாதி ஆக்கிவிட்டு பயணம் தொடர்ந்தது பயணம் ஒரு நாளல்ல இருநாள் அல்ல தோழர்களே 30 ஆண்டுகள் உருண்டோடி விட்டது அப்போது மோசேவிற்கு 130 வயது அவரை ஒரு மலையின் உச்சிக்கு கொண்டு சென்று அதோ ஆசீர்வதிக்கப்பட்ட பூமியை பார்த்துக் கொள் என்று காட்டிவிட்டு அந்த நெடும் பயணத்தை அடுத்து ஜோஸ்வா தலைமையில் முன்னெடுத்து செல்ல பணித்து ஜோஸ்வா யோர்தான் ஆற்றைப் பிளந்து பயணம் சென்று 40 ஆம் ஆண்டில் ஆசீர்வதிக்கப்பட்ட பூமிக்கு இஸ்ரவேலர்களை கொண்டு சேர்பித்தார் நம்புங்கள் தோழர்களே கடவுளால் ஆசீர்வதிக்கப் பட்டவர்களுக்கே இலக்கை சென்று சேர 40 ஆண்டுகள் தேவைப்பட்டது என்றால் 31 ஆம் ஆண்டில் கால் எடுத்து வைத்திருக்கும் மதிமுக 40 ஆம் ஆண்டில் கால் எடுத்து வைக்கும் போது திராவிட இயக்கத்தின் மறுமலர்ச்சி தூதுவர் தலைவர் வைகோ அவர்கள் தலைமையில் வெற்றிச் சரித்திரம் படைப்போம் அதற்கு இந்த மாநாடும் நீங்களும் சாட்சியாகட்டும்

காலத்திற்கு ஏற்றார் போன்று சூழ்நிலைக்கு தகுந்தவாறு நாம் நம்மை தகவமைத்துக் கொண்டு மாலை நேர விழாவாக பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை கொண்டாட கூடியிருக்கின்றோம்

திராவிட இயக்க மாநாடுகளில் குடும்பம் குடும்பமாக பங்கேற்று மூன்று நாட்கள் இரண்டு நாட்கள் நடந்து உள்ளது 

மறுமலர்ச்சி திமுக வரலாற்றில் 1994 ஏப்ரல் 16 எழுச்சி நாள் பேரணி நாம் யார் நம் வலிமை என்ன என்பதை உலகுக்கு உணர்த்தியது 

WAS THIS THE FACE THAT LAUNCHED A THOUSAND SHIP'S 

இந்த முகமா கிரேக்கத்திலிருந்து ஆயிரம் கப்பல்களை ட்ராய் நகருக்கு கொண்டு வந்தது என்று ஹெலன் ஆஃப் ட்ராய் திரைப்படம் வசனம் சொல்லும் அதைப் போன்று 

தலைவர் வைகோ அவர்களின் திருமுகம் காண தமிழகம் எங்கும் இருந்தும் 20 லட்சம் மக்கள் தலைநகர் சென்னைக்கு வந்தார்களே 

மெரினா கடற்கரை எங்கு திரும்பினாலும் மனிதத் தலைகள் ஒரு பக்கம் வங்கக் கடல் மறுபக்கம் மக்கள் கடல் தலைநகர் சென்னை முழுவதும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுப்பு நினைவு இருக்கிறதா தோழர்களே 

1995 திருச்சியில் மூன்று நாட்கள் நடைபெற்ற மாநில மாநாடு தமிழ் ஈழம் ஒன்றே ஒற்றைத் தீர்வு ஈழத்தமிழர் பிரச்சினைக்கு என்று முன் அறிவித்தமாநாடு 

1996 மதுரை தேர்தல் சிறப்பு மாநாடு 

அண்ணா அவர்களின் கனவு திட்டம் சேது சமுத்திர திட்டத்தை வைகோ கேட்டதின் பேரில் அதை நாட்டிற்கு அற்பணிக்கின்றேன் என்று பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் அறிவித்த 1998 சென்னை மறுமலர்ச்சி பேரணி 

1999 ஜூலை 24,25 இரண்டு நாட்கள் காஞ்சியில் நடைபெற்ற மாநில சுயாட்சி மாநாடு அண்ணாவின் மாநில சுயாட்சி அகல் விளக்கை என் தம்பி வைகோ கையில் ஏந்தி இருக்கின்றார் என்று கலைஞரால் ஆராதிக்கப்பட்ட மாநில சுயாட்சி மாநாடு 

கடந்த மதுரை மாநாட்டில் பங்கேற்று மகிழ்ச்சியோடு விடைபெற்றவர் இந்த மாநாட்டின்  நினைவரங்கமாக வாழும் அண்ணன் 

திரு கணேசமூர்த்தி அவர்கள் முன்னெடுத்த இரண்டு நாட்கள் நடைபெற்ற 2001 ஈரோடு தமிழக எழுச்சி மாநாடு அதற்குப் பின்னர் சென்னை கோவை மதுரை திருச்சி விருதுநகர் விழுப்புரம் பல்லடம் நெல்லை தஞ்சை மாநாடுகள் என்று இப்படி எத்தனை எத்தனை கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கும் மாநாடுகள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்

பேரறிஞர் அண்ணா அவர்களின் 116 வது பிறந்தநாள் விழாவை அதே உற்சாகத்தோடு இன்றும் நாம் நடத்திக்கொண்டு இருக்கின்றோம் ஒரு காலகட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டு 5 நாட்கள் நடைபெற்றது பின்னர் ஒரு நாள் மேட்ச் 50 + 50  100 ஒவர்கள் 600 பந்துகள் வீசப்பட்டு ஆடப்பட்டது பின்னர் வீரர்களின் திறமையை கூர் தீட்டும் வகையில் 20 + 20 - 40 ஒவர்கள் 240 பந்துகளில்  மாலை நேர விளையாட்டாக 5 மணி நேரத்தில் ஆடி முடிவுகள் அறிவிக்கப்பட்டது 

கிரிக்கெட் எதற்காக உருவாக்கப்பட்டது என்பதை கடந்து அதில் ஒன்று நாம் அறிந்து கொள்ள வேண்டிய பாடம் இருக்கிறது போலார் பந்து வீசுவது நீ ஒவ்வொரு பந்தையும் நாம் அடித்து சிக்சர் பவுண்டரி என்று ஆடுவதற்காக அல்ல ஒவ்வொரு பந்தையும் போலார் வீசுவது உன்னை அவுட் ஆக்கத்தான் பந்து வீசப்படுகிறது அதில் திறமை உள்ளவர்கள் சிக்ஸர் பவுண்டரி என்ற ஆடி வெற்றி பெறுகின்றார் மேன் ஆஃப் தி மேட்ச் ஆக மாறுகிறார்கள் அரசியலிலும் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று யாரும் விரும்புவதில்லை உன்னை வீழ்த்த வேண்டும் என்று எல்லா சாம பேத தான தண்டம் என்று எல்லா வித்தைகளையும் காட்டுவார்கள் எதிர்க்கட்சிகள் குறை சொல்வது அவதூறு சொல் வது அதைக் கடந்து நாம் பயணத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் 

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழாவை கொண்டாட நாம் தலைநகர் சென்னையில் காமராஜர் அரங்கில் கூடி இருக்கின்றோம் 

பேரறிஞர் அண்ணா அவர்களின் பண்புநலன் 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் அண்ணா அவர்களின் தலைமையிலான திமுக அணியை தோற்கடிக்க வேண்டும் என்று சூறாவளியாக சுற்றி சுழன்று பிரச்சாரம் செய்தார் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் ஆனால் மக்கள் மகத்தான வெற்றியை அண்ணாவுக்கு வழங்கினர் அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்கும் முன் திருச்சியில் தங்கி இருந்த தந்தை பெரியாரை சந்தித்து இந்த ஆட்சி உங்களுக்கு காணிக்கையாக்குகிறேன் எங்களை வழி நடத்துங்கள் என்று மாலை அணிவித்து வாழ்த்து பெற்றார் 

அதேபோன்று 1967 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்பதற்கும் முன் தியாகராய நகரில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஒவ்வொருவராக அழைத்து அவர் பெயர் சொல்லி வெற்றி பெற்ற தொகுதியின் பெயரைச் சொல்லிக் கொண்டே வந்தபோது விருதுநகர் சட்டமன்றத் தொகுதி 

பெ சீனிவாசன் என்றவுடன் கூட்டத்தினர் கைதட்டி  ஆரவாரம் செய்தனர் கைத்தட்டல் ஆரவாரத்தை கை அசைத்து அடக்கி விட்டு அண்ணா எழுந்து உருக்கமுடன் பேசினார் அன்பு நண்பர்களே என் நெஞ்சம் புண்பட்டு கிடக்கிறது அதை இன்னும் குத்திக் கிளராதீர்கள் விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் பெருந்தலைவர் காமராசரை எதிர்த்து ஜனநாயகப் போட்டிக்காக மாணவர் சீனிவாசனை நிறுத்தினோம். அடித்த அரசியல் சூறாவளியில் அனுபவம்மிக்க தலைவர் காமராஜர் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டார் அவர் வெற்றி பெற்று கோட்டைக்கு வந்து நாம் ஆட்சிக்கு நல் ஆலோசனைகள் வழங்காமல் போயிற்றே என்ற நான் உள்ளம் வருந்தி கொண்டிருக்கின்ற இருக்கும்போது இப்படி ஆரவாரம் செய்து என் நெஞ்சை மேலும் வேதனைப்படுத்தாதீர்கள் என்று சொன்ன மிகப்பெரிய ஜனநாயக சுடரொளி பேரறிஞர் அண்ணா 

யார் காமராசர்

நாட்டு விடுதலைக்கு  9 ஒன்பது ஆண்டுகள் சிறைவாசம் 12 பன்னிரெண்டு ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் 5 ஐந்து ஆண்டுகள் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் 5 ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினர் 4 நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினர் 9 ஆண்டுகள் அன்னைத் தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் இரண்டு முறை இந்திய பிரதமரை உருவாக்கிய கிங்மேக்கர் காமராசர் 

கல்வி வெளிச்சத்தை பாய்ச்ச 6000 பள்ளிகளை திறந்து மதிய உணவு திட்டத்தை வழங்கிய அன்னபூரணி காமராசர் ஓடுகின்ற ஆறுகளின் முதுகில் அணையைக் கட்டி விவசாயத்தை பாதுகாத்தவர் 

புதிய தொழிற்சாலைகளை கொண்டு வந்து இந்திய அளவில் தொழில் துறையில் தமிழ்நாட்டை இரண்டாம் இடத்திற்கு கொண்டு வந்தவர் 

அவர் கண் மூடினார் அவரிடம் எஞ்சி இருந்தது 60 ரூபாய் 10 கதர் வேட்டி சட்டை அவர் வாழ்ந்த வாடகை வீட்டை அதன் உரிமையாளர் எடுத்துக் கொண்டார் அவர் பயன்படுத்திய காரை கட்சி எடுத்துக்கொண்டு இந்த அரங்கில் நினைவுச் சின்னமாக வைத்திருக்கிறார்கள் அவரின் பூதவுடலை நெருப்புத் தின்றது அவரது பெயரை வரலாறு எடுத்துக் கொண்டது அவர் வாழ்ந்த வாழ்க்கையை எவரும் வாழ முடியாது வரலாறாக வாழ்ந்த தீரர் சத்தியமூர்த்தியின் சீடர் கர்மவீரர் காமராஜரின் வரலாற்றை திராவிட இயக்கத்தின் வெற்றி திருமகன் தமிழினக் காவலர் தலைவர் வைகோ அவர்களின் தொண்டன் மல்லை சத்யா  நினைவு கூறுகிறேன் என்றால் பொதுவாழ்கைக்கு இலக்கணமாக திகழ்ந்தவர் கர்மவீரர் காமராஜர் அவர்கள் 

அந்த கர்மவீரர் காமராசருக்கும் அன்பு தலைப்பு வைகோ அவர்களுக்கும் ஒரு ஒற்றுமை விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் பெருந்தலைவர் காமராஜர் தோற்கடிக்க பட்டத்தைப் போன்று விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் தலைவர் வைகோ அவர்களை மக்கள் தோற்கடித்தார்கள் 

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் விருதுநகரில் தோற்றதற்குப் பின்னர் குமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் அவர் மறைவிற்குப் பின்னர் குமரிக் கடல் அருகே மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று மக்கள் போராடினார்கள் போராட்டத்தில் பங்கேற்ற தலைவர் வைகோ இந்திய அரசிடம் வாதாடி அனுமதி பெற்று தரும் வரை இந்த மண்ணை நான் மிதிக்க மாட்டேன் என்று சபதம் பூண்டு தலைநகர் டெல்லி செல்கிறார் காட்சிகள் மாறுகிறது வாஜ்பாய்  ஆட்சி தள்ளாட்டம் காணுகிறது அந்த நிலையிலும் தன் வாக்கை பாதுகாக்க கர்மவீரர் காமராஜரின் மணிமண்டபம் கட்ட அனுமதி பெற்றுத் தந்தவர் தலைவர் வைகோ அவர்கள் அதேபோன்று முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கும் 

கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கசப்பின் காரணமாக முரசொலியும் தென்றலும் ஒன்றை ஒன்று பேனாமுனையில் தாக்கிக் கொண்டன இதை கவனித்த அண்ணா கவிஞர் கண்ணதாசனை அழைத்து வரச் சொல்லி நீயும் கருணாநிதியும் ஏடுகளில் தாக்கிக் கொள்வதை நான் பார்த்துக் கொண்டு தான் வருகின்றேன் உங்கள் இருவரின் ஆற்றலை எதிர் கட்சிக்களின் மீது பிரயோகித்தால் கட்சிக்கும் நாட்டுக்கும் பயன் உண்டு 

கண்ணதாச நன்றாக கவனித்துக் கொள் கழகம் தான் எனக்கு முக்கியம் கழகம் வளர கருணாநிதி அவசியம் தன் உயிரைக் கொடுத்து கழகத்தை வளர்ப்பவர் எந்த விதமான தியாகத்திற்கும் தயங்காதவர் பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு தியாக உள்ளம் தேவை. அதை நிரப்ப பெற்றிருப்பவர் கருணாநிதி  நண்பன் என்ற வகையில் நீயும் எனக்குத் தேவை என்று கடிந்து கொண்டார் இதை கண்ணதாசன் எதிர்பார்க்கவில்லை இதேபோன்று சில சம்பவங்கள் நினைவு கூர்ந்து கண்ணதாசன் ஒரு பாடல் எழுதினார் 

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம் என்று  அதே கண்ணதாசன் அண்ணாவிடம் கருத்து வேறுபாடு கொண்டு திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து வெளியேறி மாற்று முகாமில் இருக்கின்றார் 

அண்ணா உடல் நலம் கெட்டு அமெரிக்கா சென்று புகழ்பெற்ற மருத்துவர் மில்லரிடம் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அண்ணா அவர்களின் உடல் நிலை குறித்து மனம் உருகி எழுதினார் தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் வரும் பாடல் 

நலந்தானா நலந்தானா உடலும் உள்ளம் நடந்தானா கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண்பட்டதோ அதை யார் அறிவார் புண்பட்ட செய்தியை அறிந்த பின் இந்தப் பெண் பட்ட பாட்டை யார் அறிவார் என்று கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடல் குறித்து அண்ணா தம்பிக்கு எழுதிய கடைசி கடிதத்தில் குறிப்பிடுகின்றார் தம்பி என் மனதுக்கு இனிமை தந்திடும் பணியிலே என்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியவில்லை என்ற கவலை காரணம் என் உடல் நிலை அந்தப் பணியினை முன்பு போலச் செய்ய முடியாதவனாக்கப்பட்டு முடியவில்லையே என்ற ஏக்கத்தால் தாக்கப்பட்டு சூழ்நிலையின் கைதியாக்கப்பட்டுக் கிடக்கிறேன் சூழ்நிலை கைதி என்ற சொற்றொடருக்குத்தான் முதலமைச்சர் என்று முத்திரை இட்டு இருக்கிறார்கள் தம்பி 

என் மகன் இளங்கோவின் மகள்  பேத்தி கண்மணி தன் மழலை மொழியில் பாடுகிறார் நலம் தானா நலம் தானா உடலும் உள்ளமும் நலந்தானா என்று எனக்கென்னவோ அந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் தம்பிகள் நாட்டில் நல்லோர் அனைவருமே என்னை நலம் தானா என்று கேட்பது போலவே தோன்றுகிறது தம்பி என்று அண்ணா தம்பிக்கு எழுதுகிறார் 

அந்த அண்ணாவின் நிகழ்கால அடையாளமாக திகழும் தலைவர் வைகோ அவர்களைப் பார்த்து நாடு கேட்கிறது நலம் தானா நாம் கேட்கின்றோம் நலம் தானா உடலும் உள்ளமும் நலந்தானா என்று 

இதோ இங்கு திரண்டு இருப்பவர்கள் என்னிடம் நீ 30 ஆண்டுகள் கழகத்திற்காக உழைத்து இருக்கின்றாய் சிறை சென்று உள்ளாய் வழக்குகளை சுமந்து உள்ளாய் உனக்கு வெகுமதி தருகின்றோம் என்ன வேண்டும் கேள் என்று என்னிடம் கேட்டாள் எனக்கு என் தலைவர் வைகோ மட்டும் போதும் என்பேன் அதுவே என் அரசியல் விலாசம்

மாநாட்டின் வெற்றிக்காக ஒடி உழைத்த கால்களுக்கும் ஒத்துழைத்த கரங்களுக்கும் நன்றி பாராட்டி இடம்சார்கின்றேன் வணக்கம் . இவ்வாறு உரையாற்றினார். 


 

No comments

Thank you for your comments