மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் தாமதத்தால் பொதுமக்கள் அவதி - வி.கே.சசிகலா குற்றச்சாட்டு
காஞ்சிபுரம், செப்.15:
முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் பிறந்த தினத்தையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து வி.கே.சசிகலா மரியாதை செலுத்தினார்.பின்னர் அவரது வரலாறு தொடர்பான புகைப்படங்களையும் பார்வையிட்டார்.இதனைத் தொடர்ந்து அவர் மேலும் கூறியது.
மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் தாமதமாகிக் கொண்டே வருவதால் பொதுமக்கள்,வாகன ஓட்டிகள் பல்வேறு அவதிகளுக்கு ஆளாகின்றனர்.இத்திட்டத்தை விரைவாக நிறைவேற்ற முடியாமல் திமுக அரசு தடுமாற்றத்தில் உள்ளது.இதற்காக செலவிடப் பட வேண்டிய நிதியை வேறு திட்டப்பணிகளுக்கு செலவிட்டு மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை தாமதப்படுத்தி வருகிறது.உடனடியாக திமுக வின் எம்பிக்கள் 40 பேரும் மத்திய அரசில் உரிய அதிகாரகளை சந்தித்து திட்டத்தை நிறைவேற்ற முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை தமிழக அரசு கடைப்பிடித்து வருவதால் தமிழகத்தில் பல நல்ல திட்டங்களை நிறைவேற்ற முடியாத நிலை இருந்து வருகிறது.
தமிழக முதலமைச்சர் துபாய்,சிங்கப்பூர்,ஸ்பெயின் மற்றும் அண்மையில் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சென்று வந்து பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து ஏராளமான முதலீடுகளை ஈர்த்திருப்பதாகவும், இதனால் பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை கிடைக்கும் எனத் தெரிவித்திருக்கிறார்.
இதற்கு முன்பு 3 முறை வெளிநாடு சென்ற போது பல முதலீடுகளை ஈர்த்திருப்பதாகவும்,பல பேருக்கு வேலை கிடைத்திருப்பதாகவும் கூறினார்.ஆனால் எந்த மாவட்டத்தில் என்ன தொழில் தொடங்கப்பட்டது,எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது என்ற விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.வெளிப்படைத் தன்மை இல்லாத அரசாக திமுக அரசு இருந்து வருவதாகவும் வி.கே.சசிகலா தெரிவித்தார்.



No comments
Thank you for your comments