காஞ்சிபுரம் மாவட்ட வளர்ச்சிப் பணிகளை தமிழக சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு
காஞ்சிபுரம்,செப்.12:
தமிழக சட்டப் பேரவையின் மதிப்பீட்டுக் குழுவினர் அதன் தலைவர் எஸ்.காந்திராஜன் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழக சட்டப் பேரவையின் மதிப்பீட்டுக் குழுவின் தலைவரும்,வேடசந்தூர் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.காந்திராஜன் தலைமையில் எம்எல்ஏக்களும், உறுப்பினர் களுமான இராம.கருமாணிக்கம், சேவூர்.எஸ்.ராமச்சந்திரன், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
முதலாவதாக காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயிலில் ரூ.24.50 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகளை பார்வையிட்டனர். திருப்பணிகளை செய்ய நன்கொடை கொடுத்தவர்கள் பற்றிய விபரங்களை பக்தர்கள் பார்வையில் படும்படி எழுதி வைக்குமாறும் அறநிலையத்துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர்.
முன்னதாக அறநிலையத்துறை காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் குமரகுரு,உதவி ஆணையர் கருணாநிதி,கோயில் அறங்காவலர் குழு தலைவர் வேல்மோகன்,உறுப்பினர் ஜெகன்னாதன்,செயல் அலுவலர் முத்துலட்சுமி, மற்றும் செயல் அலுவலர்கள் செந்தில்குமார், வேலனரசு ஆகியோர் பூரண கும்ப மரியாதையுடன் மதிப்பீட்டுக் குழுவினரை வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சியில் ரூ.460லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஜவஹர்லால் நேரு மார்க்கெட் கட்டுமானப்பணி,அன்னை அஞ்சுகம் திருமண மண்டபம் கட்டும் பணி,வாலாஜாபாத் பேரூராட்சியில் செயல்பட்டு வரும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான மாணவியர் விடுதி ஆகியனவற்றையும் மதிப்பீட்டுக் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நிறைவாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசின் பல்வேறு துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் மதிப்பீட்டுக் குழுவின் தலைவர் எஸ்.காந்திராஜன் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்திலும்,ஆய்விலும் காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன்,ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.ஆர்த்தி,சட்டப் பேரவை செயலாளர் கி.சீனிவாசன்,மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ்,மாநகராட்சி ஆணையர் வே.நவேந்திரன் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள்,உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments