Breaking News

காஞ்சிபுரத்தில் சங்கராசாரியார் சுவாமிகளுக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு


காஞ்சிபுரம், செப்.18:

காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உலக நன்மைக்காக சாதுர்மாஸ்ய விரதம் நிறைவு பெற்றதையடுத்து புதன்கிழமை பக்தர்கள் வழிநெடுகிலும் ஆரத்தி எடுத்தும்,மலர்கள் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.




காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உலக நன்மைக்காக 48 நாட்கள் ஓரிக்கை மகா பெரியவர் மண்டப வளாகத்தில் தங்கி விரதம் இருந்து வந்தார்.இவ்விரதமிருந்த துறவியர்களை தரிசிப்பது சிறப்பு என்பதால் விரதநாள் நிறைவு பெற்றதும் ஒரிக்கையிலிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வரை ஊர்வலமாக பக்தர்கள் அழைத்து வந்தனர்.

ஓரிக்கையிலிருந்து புறப்படும் போது காஞ்சி சங்கர மட வரவேற்புக் குழுவின் தலைவர் டி.கணேஷ் தலைமையில் பூரணகும்ப மரியாதை செய்யப்பட்டது.இதைத் தொடர்ந்து பாதயாத்திரையாக அருகில் உள்ள திரளெபதி அம்மன் கோயில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார மேடைக்கு எழுந்தருளி பக்தர்கள் அனைவருக்கும் ஆசி வழங்கினார்.

அந்த மேடையில் இருந்தவாறு ஊர்வலத்தில் பங்கேற்ற ஒயிலாட்டாம் மற்றும் கோலாட்டக்காரர்கள், வேத விற்பன்னர்கள், மதூர் முகுந்த ராமானுஜ பாகவதர் உள்ளிட்ட 7 பஜனைக்குழுவினர், ஓதுவார்கள் குழுவினர், சிவ வாத்தியக்குழுவினர், பழங்குடியினர்கள், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை நடத்தியவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், காஞ்சிபுரத்தில் உள்ள 300க்கும் மேற்பட்ட கோயில்களின் பதாகைகளை கையில் ஏந்தியவாறு வந்தவர்கள், பக்தி இசைக் கலைஞர்கள், சேவை ஆட்டம் ஆடிய ஜவ்வாதுமலை பழங்குடியின மக்கள் ஆகியோர் அனைவருக்கும் ஆசி வழங்கினார்.

ஊர்வலம் வரும் வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் வண்ணக் கோலமிட்டும்,ஆரத்தி எடுத்தும், மலர்கள் தூவியும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.



நகரில் பணாமுடீஸ்வரர் கோயில்,பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி, கச்சபேசுவரர் கோயில் உட்பட 7 இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. 

ஊர்வலத்தில் விநாயகர்,முருகன்,காமாட்சி,பெருமாள் உள்ளிட்ட தெய்வங்கள் வண்ணமலர் ரதங்களில் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக வந்தது.

காஞ்சிபுரம் சங்கரா செவிலியர் கல்லூரி மாணவியர்கள் தெய்வங்களின் வேடங்களை அணிந்தவாறு ஊர்வலத்தில் வந்தனர்.ஊர்வலம் காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் வந்து நிறைவு பெற்றதும் காஞ்சிபுரத்தில் உள்ள 51 ஆலயங்களின் பிரசாதங்கள் அடங்கிய தொகுப்பு பைகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. நிறைவாக காஞ்சி சங்கராசாரியார் சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசியுரை வழங்கினார்.

ஏற்பாடுகளை காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர்,செயலாளர் செல்லா.விஸ்வநாத சாஸ்திரி, ஓரிக்கை மணி மண்டப நிர்வாக அறங்காவலர் மணி ஐயர்,சங்கரா கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசுவரன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

ஊர்வலத்தில் தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலையின் துணை வேந்தர் வைத்திய சுப்பிரமணியம், முன்னாள் எம்எல்ஏ வாலாஜாபாத். பா.கணேசன், காஞ்சிபுரம் பாஜக மேற்கு மண்டல தலைவர் காஞ்சி.ஜீவானந்தம் ஆகியோர் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



No comments

Thank you for your comments