காஞ்சிபுரத்தில் மக்கள் நீதிமன்றம்,ரூ.9.33 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கல்
காஞ்சிபுரம்,செப்.14:
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் கூடியது.காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ப.உ.செம்மல் தலைமை வகித்து மக்கள் நீதிமன்றத்தை தொடக்கி வைத்தார்.தொழிலாளர் நல நீதிபதி சுஜாதா, தலைமைக் குற்றவியல் நீதிபதி எம்.வசந்தகுமார், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆர்.ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடக்க விழாவில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் டி.திருமால் வரவேற்று பேசினார்.மக்கள் நீதிமன்றத்தில் குடும்ப நல வழக்கு,மோட்டார் வாகன விபத்து வழக்கு,வங்கி வராக்கடன் வழக்கு ஆகியன உட்பட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
மக்கள் நீதிமன்றத்தில் காஞ்சிபுரம் வட்டாரம் முழுவதும் 908 நிலுவை வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இவற்றில் 258 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு இழப்பீட்டுத் தொகையாக ரூ.9,33,57,856 வழங்கப்பட்டது.
பயனாளிகளுக்கு இழப்பீட்டுத் தொகையினை காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் வழங்கினார்.தொடக்க விழாவில் வழக்குரைஞர்கள் பத்மனாபன்,சத்யமூர்த்தி,மணிமாறன் உட்பட வழக்குரைஞர்கள், வழக்காடிகள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments