ராணி அண்ணாதுரை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மழைநீர் தேங்குவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் - பெற்றோர்கள் தலைமையாசிரியரிடம் கடும் வாக்குவாதம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சி ராணி அண்ணாதுரை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மழைநீர் குளம் போல் தேங்குவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் தலைமையாசிரியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், வகுப்பறைகள் இல்லாததால் மாணவ மாணவிகள் தரையில் அமர்ந்து படிப்பதால் அவர்கள் பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை என்ற குற்றச்சாட்டை தொடர்ந்ததையடுத்து பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாநகராட்சி, சேக்குபேட்டை காந்தி மைதானத்தில், டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, நீதித்துறை நடுவர் நீதிமன்றம், ராணி அண்ணாதுரை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி, சமக்ர சிஷ்யான், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
பல்வேறு அரசு அலுவலகம், மாநகராட்சி பள்ளிகள் அமைந்துள்ள காந்தி மைதானத்தில், மழை பெய்யும் போதெல்லாம் மழைநீர் குளம்போல தேங்குவது வாடிக்கையாக உள்ளது. இதனால், பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி வடியாமல் உள்ளது. அதேபோல் பிஎஸ் சீனிவாசா மேல்நிலைப் பள்ளி அருகேயும் கழிவுநீர் குளம் போல் தேங்கி உள்ளது. தேங்குகின்ற இந்த மழை நீரும், கழிவுநீரும் வடிய இடமில்லாததால் வளாகத்தை சுற்றி சுற்றி வருகின்றபடியால் மில்லியன் கணக்கில் கொசுக்கள் உற்பத்தி செய்யும் மையமாகவும், மாணவ மாணவிகளுக்கு இலவசமாக தொற்றுநோய் கொடுக்கும் இடமாகவும் ராணி அண்ணாதுரை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியும் பி எஸ் சீனிவாசா மேல்நிலைப்பள்ளியும் மாறிய நிலைக்கண்டு பெற்றோர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டதுள்ளது.
டாக்டர் பி.எஸ்.எஸ்., பள்ளியில் சத்துணவு கூடத்திற்கு செல்லும் ஊழியர்கள், கழிவுநீர் கலந்த மழைநீரில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. அதேபோல, நீதிமன்றத்திற்கு செல்வோர் சகதியான சாலையில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. நாள் கணக்கில் தேங்கும் மழைநீரால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, ராணி அண்ணாதுரை, டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் பள்ளி அமைந்துள்ள காந்தி மைதானத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க, மைதானத்தில் குவியல் குவியலாக கொட்டப்பட்டுள்ள மண்ணை அவ்வப்போது சமன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் மாணவிகள் படிக்கும் வகுப்பறைகள் மிகவும் குறைவாக உள்ள காரணத்தினால் ஒரு வகுப்பறையில் 40 மாணவிகள் படிக்க வேண்டிய இடத்தில் 125க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரே வகுப்பறையில் 125க்கும் மேற்பட்ட மாணவிகளை அடைத்து வைப்பதால் மாணவிகள் பாடங்களில் கவனம் செலுத்த முடியவில்லை என்ற குற்றச்சாட்டில் நீண்ட காலமாக தொடர்கின்றது.
பேரறிஞர் அண்ணாதுரை அவர்களின் மனைவி பெயரில் உள்ள ராணி அண்ணாதுரை பள்ளியில் மாணவிகள் படிப்பதற்கு வகுப்பறை இல்லாமல் உள்ளதும், உணவு அருந்தும் போது தேங்கி நிற்கும் சாக்கடை நீர் பக்கத்தில் அமர்ந்து உணவு அருந்துவதும் மிகவும் வேதனைக்குரிய செயல் என பெற்றோர்கள் புலம்புகின்றனர்.
மாணவிகள் தரையில் அமர்ந்து படிக்கும் போது பாடத்தில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. ஆசிரியர் நடத்துகின்ற பாடத்தை உணர்ந்து கொள்ள முடியவில்லை. எனவே எங்களுக்கு கூடுதல் வகுப்பறைகளை அமைத்துத் தர வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் பள்ளிக்கு செல்ல முடியாது என பெற்றோர்களிடம் மாணவிகள் கூறிய காரணத்தினால், பெற்றோர்கள் பள்ளியின் நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் இங்கு உள்ள சில வகுப்பறைகளில் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம் செயல்பட்டு வருவதால் வகுப்பறைகள் பற்றாக்குறை என்பது மிகப் பெரும் பிரச்சினையாக உள்ளது தொடக்க கல்வி அலுவலகம் காலி செய்ய ஏற்கனவே மாநகராட்சி அறிவுறுத்தி வந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் மெத்தனமாக உள்ளது கண்கூடாக தெரிகின்றது என பெற்றோர்கள் புலம்புகின்றனர்.
No comments
Thank you for your comments