காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள், சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் ஆய்வு
காஞ்சிபுரம், ஆக.20:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை செவ்வாய்க்கிழமை தமிழக சட்ட மன்ற பேரவையின் பொது நிறுவனங்கள் குழுவின் தலைவர் ஏ.பி.நந்தகுமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
தமிழக சட்டமன்ற பேரவையின் பொது நிறுவனங்கள் குழுவின் தலைவர் ஏ.பி.நந்தகுமார் தலைமையில் அக்குழுவின் உறுப்பினர்களான ஈ.ஆர்.ஈஸ்வரன், உடுமலை.கே.ராதாகிருஷ்ணன், கடம்பூர்.ராஜூ, மு.பெ.கிரி, ஆ.கோவிந்தசாமி, ம.சிந்தனை செல்வன், ஒய்.பிரகாஷ், சி.விஜயபாஸ்கர், எம்.ஹெச்.ஜவாஹிருல்லா மற்றும் காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் ஒவ்வொன்றையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் காஞ்சிபுரம் அருகே செவிலிமேட்டில் பன்னடுக்கு மாடிக் கட்டிடம் கட்டும் பணி, கைத்தறித்துறை சார்பில் காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் ஜரிகை ஆலை செயல்படும் விதம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஸ்ரீ பெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வல்லம் ஊராட்சியில் என்பீல்ட் இருசக்கர வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலை ஆகியனவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்டம் தலைமையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் தலைவர் ஏ.பி.நந்தகுமார் தலைமையில் ஆய்வுக் கூட்டமும் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி கோவிந்தராஜ்,பொது நிறுவனங்கள் குழுவின் இணைச் செயலாளர் பி.தேன்மொழி, குழு அலுவலர் செந்தில்குமார், பிரிவு அலுவலர் ஜி.பாபு மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments