காஞ்சிபுரத்தில் கழிவுநீரை சுத்தம் செய்யாத மாநகராட்சியை கண்டித்து சாலை மறியல் - 35 பேர் கைது
காஞ்சிபுரம், ஜூலை 1:
காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் நுழைவு வாயில் முன்பாக பாதாள சாக்கடை கழிவுநீர் வழிந்தோடுவதை சுத்தம் செய்யாத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாக 35 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம் 20 வது வார்டு புதுத்தெரு பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான ராஜாஜி மார்க்கெட் பகுதி உள்ளது. இப்பகுதியின் பிரதான சாலையாக விளங்கும் புதுப்பாளையம் தெருவில் கடந்த சில ஆண்டுகளாகவே கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் பலன் இல்லாமல் இருந்து வந்ததாக கூறி அப்பகுதி பொதுமக்கள் ரஜாஜி மார்க்கெட் நுழைவுவாயில் பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதியில் வசிக்கும் பலருக்கும் டெங்கு காய்ச்சல்,கொசுக்கள் தொல்லை போன்றவற்றால் அவதிப்பட்டு வருவதாக சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதையடுத்து தகவலறிந்த விஷ்ணுகாஞ்சி போலீஸôர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.போராட்டம் கைவிடப்படாததால் காவல்துறையினர் 8 பெண்கள் உட்பட 35 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
No comments
Thank you for your comments