Breaking News

காஞ்சிபுரத்தில் பொய்கையாழ்வார் திருக்குளம் ரூ.17.8 லட்சம் மதிப்பில் சீரமைப்பு

காஞ்சிபுரம், ஜூலை 9:

காஞ்சிபுரம் சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயில் அருகில் உள்ள பொய்கையாழ்வார் திருக்குளம் ரூ.17.8 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டு ஆலய நிர்வாகிகளிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.


காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னக்காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ளது பழமையான சொன்னவண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில். இக்கோயில் அருகில் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பொய்கையாழ்வார் பிறந்த குளம் ஒன்றும் உள்ளது. 


இக்குளத்திற்கு பொய்கையாழ்வார் குளம் என்றும் பொய்கைக்குளம் என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது.சுமார் 4080 சதுர மீட்டர் பரப்பளவு உடைய மிகப்பெரிய இக்குளம் தூர்வாரப்படாமல் இருந்து வந்தது.

இதனையடுத்து மும்பையை சேர்ந்த எண்ணெய் மற்றும் வாயு ஆலைகள் வடிவமைக்கும் பெட்ரோபேக் நிறுவனத்தின் சமூகப் பாதுகாப்புத் திட்ட நிதியிலிருந்து எக்ஸ்னோரா நிறுவனத்தின் உதவியுடன் திருக்குளம் ரூ.17.8 லட்சம் மதிப்பில் முழுவதுமாக தூர்வாரப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

சீரமைக்கப்பட்ட திருக்குளத்தை பெட்ரோபேக் நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் சத்தியமூர்த்தி திறந்து வைத்தார்.

எக்ஸ்னோரா நிறுவனத்தின் நிர்வாகி மோகன் முன்னிலை வகித்தார்.சீரமைக்கப்பட்ட குளம் ஆலய அறங்காவலர் நல்லப்ப நாராயணனிடம் ஒப்படைக்கப்பட்டது.இதனையடுத்து குளக்கரை ஓரங்களில் மரக்கன்றுகள் நடுதலும் நடைபெற்றது.

இவ்விழாவில் திருக்குளத்தை சுற்றியுள்ள பொதுமக்கள் பலரும் திரளாக பங்கேற்றதுடன் குளத்தில் நீர் ஆதாரத்தை பாதுகாப்போம் என்று உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.

படவிளக்கம்: சின்னக்காஞ்சிபுரத்தில் சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயில் அருகே உள்ள சீரமைக்கப்பட்ட பொய்கையாழ்வார் குளத்தின் எழில் தோற்றம்

No comments

Thank you for your comments