3-வது முறையாக பிரதமரான மோடியின் முதல் கையெழுத்து என்ன?
புதுடெல்லி:
மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடி, இன்று (திங்கட்கிழமை) தனது அலுவலகத்தில் விவசாயிகள் நலன் சார்ந்த திட்டம் தொடர்பான கோப்பில் தனது முதல் கையொப்பத்தை இட்டுள்ளார். 9.3 கோடி விவசாயிகள் பயன் அடையும் வகையில் ரூ.20,000 கோடி விடுவிக்கும் கோப்பில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.
![]() |
புது டெல்லியில் உள்ள சவுத் பிளாக்கில் இந்தியப் பிரதமரின் அலுவலகத்தில் பிரதமர் பொறுப்பேற்றபோது எடுத்தபடம். |
முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அன்று அவருக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மொத்தம் 72 பேர் நேற்றைய தினம் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். தேர்தலில் 240 இடங்களில் வென்ற பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் இந்த முறை ஆட்சி அமைத்து உள்ளது.
முதல் கையெழுத்து:
பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர் இன்று தனது அலுவலகத்துக்கு சென்றதும், ‘பி.எம் கிசான் நிதி’ எனப்படும் பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு நிதியின் 17-வது தவணையை விடுவிப்பதற்கான கோப்பில் முதல் கையெழுத்திட்டார். விடுவிக்கப்படும் ரூ.20,000 கோடி நிதியின் மூலம் 9.3 கோடி விவசாயிகள் பயனடைவார்கள்.
கோப்பில் கையெழுத்திட்ட பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது,
“இதன் மூலம் மொத்தம் 9.3 கோடி விவசாயிகள் பயன் அடைவார்கள். ரூ.20,000 கோடி இதில் விநியோகம் செய்யப்படும். வேளாண் மக்களின் நலனுக்காக எங்களது அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்படும். அந்த வகையில் அது சார்ந்த கோப்பில் முதல் கையெழுத்திடுவது தான் சரியாக இருக்கும். வரும் காலங்களில் விவசாயிகள் மற்றும் வேளாண் துறைக்காக இன்னும் அதிகமாக உழைக்க விரும்புகிறோம்” என பிரதமர் மோடி தெரிவித்தார்.
![]() |
புதுடெல்லியில் உள்ள சவுத் பிளாக்கில் இந்தியப் பிரதமரின் அலுவலகத்தில் பொறுப்பேற்க பிரதமர் மோடி வருகை தந்த போது எடுத்தபடம். |
பிரதமர் மோடி தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று பங்கேற்கிறார். முதல் அமைச்சரவை கூட்டம் இன்று மாலை பிரதமர் இல்லத்தில் நடைபெறும் என தகவல். அதில் அமைச்சர்களுக்கான இலாகா குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டம் நடத்தப்படும். அதில் இரு அவைகளிலும் பிரதமர் மோடி தனது அரசின் நோக்கம் மற்றும் முன்னுரிமை கொடுக்க உள்ள விவகாரங்களை குறிப்பிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி நேற்று எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில், 140 கோடி இந்திய மக்களுக்கு சேவையாற்ற தான் தயாராக உள்ளதாகவும். இந்தியாவை புதிய வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் வகையில் தனது அமைச்சரவை செயல்படும் என்றும், இளமை மற்றும் அனுபவம் கலந்த வகையில் அமைச்சரவை சகாக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
No comments
Thank you for your comments