Breaking News

காஞ்சிபுரத்தில் ஸ்ரீ ஆதி சங்கரர் ஜெயந்தி விழா,உயர்நீதிமன்ற நீதிபதி பங்கேற்பு

காஞ்சிபுரம், மே 13:

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்ரீஆதி சங்கரரின் ஜெயந்தி விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் கலந்து கொண்டு வேதம் படித்த மாணவர்களுக்கு சான்றிதழும், நினைவுப்பரிசுகளும் வழங்கினார்.


படவிளக்கம் : வேதம் படித்த மாணவர்களுக்கு ஸ்ரீ விஜயேந்திரர் முன்னிலையில் சான்றிதழ் வழங்குகிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன்

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதாள் அவர்களது 2533 வது ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. ஜெயந்தியையொட்டி காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திரர் ஸ்ரீ மடத்தில் உள்ள ஆதிசங்கரர் சந்நிதிக்கு அபிஷேகமும்,சிறப்பு தீபாராதனைகளையும் நடத்தினார்.

ஆந்திரப் பிரதேச மாநிலம் ஹதராபாத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மகளிர் ஆதிசங்கரர் இயற்றிய சௌந்தர்யலஹரியை பாராயணம் செய்தார்கள்.

இதனையடுத்து ஸ்ரீ மடத்தில் மகா பெரியவர் அதிஷ்டானத்தின் முன்பாக ஆதிசங்கரரின் விக்ரகத்தை எழுந்தருளச் செய்து சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.

மாலையில் வேதரக்ஷனா சமிதி அறக்கட்டளை நடத்திய வாய்மொழி மற்றும் எழுத்துத் தேர்வுகளில் வெற்றி பெற்ற 100க்கும் மேற்பட்ட வேதம் படித்த மாணவர்களுக்கு ஸ்ரீ விஜயேந்திரர் முன்னிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் சான்றிதழும், நினைவுப் பரிசுகளும் வழங்கினார். 

இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல்,குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வாசுதேவன் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள்,பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மாலையில் ஆதி சங்கரர் விக்ரகத்தை தங்கத் தேரில் எழுந்தருளச் செய்து 4 ராஜவீதிகளிலும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆதி சங்கரரை தரிசனம் செய்தனர்.



No comments

Thank you for your comments