Breaking News

சிக்கிம் வேதபாடசாலை மாணவர்கள் காஞ்சிபுரம் சங்கரா பல்கலை வருகை - பழமையான ஓலைச்சுவடிகளை பார்வையிட்டு ஆய்வு

காஞ்சிபுரம்,மே.4:

சிக்கிம் தலைநகர் காங்டாங்கில் காஞ்சி சங்கர மடத்தின் சார்பில் நடத்தப்படும் வேதபாடசாலை மாணவர்கள் காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் பழமையான ஒலைச்சுவடிகள் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.



சிக்கிம் தலைநகர் காங்டாங்கில் காஞ்சி சங்கர மட நிர்வாகத்தின் சார்பில் ஸ்ரீ பஞ்சாயதன சிவன் கோயில் உள்ளது. இக்கோயில் வளாகத்திலேயே வேதங்களை கற்றுத்தரும் வேதபாடசாலையும் அமைந்துள்ளது.

அப்பாடசாலையில் பயிலும் மாணவர்கள் அவர்களது ஆசிரியர்களுடன் காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள சந்திர சேகரேந்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிந்தனர்.பல்கலைக்கழக நூலகத்தில் செயல்பட்டு வரும் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு மையத்தையும், நூலகத்தையும் அவர்கள் பார்வையிட்டனர்.

ஓலைச்சுவடிகளை நவீன உபகரணங்களைக் கொண்டு எவ்வாறு பாதுகாத்து வருகிறோம் என பல்கலையின் பேராசிரியர் நாகேசுவரராவ் மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார்.

மாணவர்களும் ஓலைச்சுவடிகளை பார்வையிட்டும்,படித்தும் ஆய்வு செய்தனர்.பல்கலையின் துணைவேந்தர் ஸ்ரீநிவாசு வேதபாடங்களில் இளங்கலை, முதுகலை படிப்புகள் படிப்பது,அது குறித்த ஆராய்ச்சிகள் செய்வது,வேதபாடங்களை கற்றுக் கொள்வதால் ஏற்படும் வேலைவாய்ப்புகள்,பயன்கள்,விண்ணப்பிக்கும் முறைகள் ஆகியன குறித்து விரிவாக விளக்கிக் கூறினார்.



No comments

Thank you for your comments