Breaking News

திமுகவை நம்பி வாக்களித்து விடாமல் சிந்தித்து வாக்களியுங்கள் - அன்புமணி ராமதாஸ் பேச்சு

காஞ்சிபுரம், ஏப்.1:

பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வருவோம் என்று தேர்தலில் வாக்குறுதியளித்த திமுகவை நம்பி அவர்களுக்கு வாக்களித்து விடாமல் சிந்தித்து வாக்களிக்குமாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திங்கள்கிழமை காஞ்சிபுரத்தில் பேசினார்.


காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசனுக்கு மாங்கனிச் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியது

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.இந்த பத்தில் 3 பேர் பெண் வேட்பாளர்கள். பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கட்சி பாமக.பாமக வைப் பொறுத்தவரை எப்போதும் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் எங்கள் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம்.

திமுகவும், அதிமுகவும் தொடர்ந்து 57ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டார்கள். இதனால் தமிழகம் குடிகாரர்களின் நாடாகவும், கஞ்சா அடிமைகளின் நாடாகவும் மாறிப் போய் விட்டது.எனவே தமிழகத்திற்கு மாற்றம் வேண்டுமெனில் மக்களவைத் தேர்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வருவோம் என்று திமுக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் கொண்டு வரவில்லை. அரசு ஊழியர்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்.

எனவே அரசு ஊழியர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். நகைக்கடன், விவசாயக்கடன், கல்விக்கடன் இவையெல்லாம் தள்ளுபடி என்றார்கள்.  எதையும் முழுமையாக செயல்படுத்தவில்லை. 

மின்கட்டணம் 3 முறை உயர்ந்திருக்கிறது. மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் மின்கட்டணம் உயர்ந்து விடும்.மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் ரூ.1000 தருவது மதுக்கடைகளுக்கே செல்கிறது.

மதுவை ஒழிக்கவும்,தமிழர்களையும்,தமிழ் மொழியையும் பாதுகாக்கவே அண்ணா திமுகவை தொடங்கினார். அவரது கொள்கைகள் எதையும் திமுகவோ அல்லது அதிமுகவோ பின்பற்றவில்லை. 

கடந்த மக்களவைத் தேர்தலில் 38 பேர் தேர்வு செய்யப்பட்டும் அவர்களால் தமிழகத்துக்கு எந்த பயனும் இல்லை என்றும் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

கூட்டத்துக்கு பாமக மாவட்ட செயலாளர் பெ.மகேஷ்பாபு தலைமை வகித்தார். பாஜக மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு, தமாகா மாவட்ட தலைவர் மலையூர். எஸ்.புருஷோத்தமன், முன்னாள் எம்எல்ஏ சக்தி.கமலாம்பாள், இந்து மக்கள் கட்சி அப்பாளர் முத்து, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாமக மாவட்ட தலைவர் உமாபதி வரவேற்றார். கூட்டத்தில் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments