காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் சிறப்புத் தொழுகை
காஞ்சிபுரம்,ஏப் 11:
காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரமலான் பண்டிகையையொட்டி ஒலிமுகம்மது பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வியாழக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சிபுரம் மாவட்டக் கிளை சார்பில் அதன் தலைவர் முஜ்புர் ரகுமான் தலைமையில் ஒலிமுகம்மது பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி திடலில் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
கிளையின் துணைத் தலைவர் சாகுல்ஹமீது, மாவட்ட துணைச் செயலாளர் அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில செயலாளர்அப்துல் முஹ்சின் கலந்து கொண்டு ரமலான் பெருநாள் கொண்டாடப்படுவதன் நோக்கம்,ஏழைகளுக்கு உதவிகள் செய்ய வேண்டியதன் அவசியம், இஸ்லாமிய ஒழுக்க முறைகள் ஆகியன குறித்து விரிவாக பேசினார்.
ஆண்கள், பெண்கள் உட்பட திரளான இஸ்லாமியர்கள் புத்தாடைகள் அணிந்தவாறு சிறப்புத் தொழுகையில் கலந்து கொண்டனர். தொழுகைக்குப் பின்னர் ஒருவரையொருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.
மாநில செயலாளர் அப்துல் முஹ்சின் பேசுகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8 இடங்களில் திடல் சிறப்புத் தொழுகை நடைபெற்றதாகவும், ரமலானையொட்டி ரூ.2.50லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருட்கள் 803 ஏழைக்குடும்பங்களுக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
No comments
Thank you for your comments