தேர்தல் நேரத்தில் மட்டும் பிரதமருக்கு தமிழக மக்கள் மீது பாசம் பொங்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்
தருமபுரி:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (11.03.2024) தருமபுரியில் நடைபெற்ற அரசு விழாவில், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைக்கும் விழா, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கக்கூடிய விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது,
“விடியல் பயணத் திட்டத்தின் மூலம் மகளிர் மாதந்தோறும் ரூ.888 சேமிக்கின்றனர். 2 ஆண்டுகளில் நான் முதல்வன் திட்டம் மூலம் 28 லட்சம் இளைஞர்கள் திறன் பயிற்சி பெற்றுள்ளனர்.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் 16 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகிறார்கள். இல்லம் தேடிக் கல்வி’ திட்டம் மூலமாக 24 லட்சத்து 86 ஆயிரம் பள்ளிக் குழந்தைகள் பயனடைந்திருக்கிறார்கள்.
2 லட்சம் உழவர்களுக்கு புதிய இலவச மின் இணைப்பு கொடுத்திருக்கிறோம். உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தில் 30 லட்சம் முதியோரும் 5 லட்சம் மாற்றுத்திறனாளிகளும் மாதந்தோறும் பயனடைந்து கொண்டு வருகிறார்கள்.
‘நம்மைக் காக்கும் 48’ திட்டம் மூலமாக 2 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறது. "மக்களைத் தேடி மருத்துவம்" திட்டத்தால் ஒரு கோடி பேர் பயனடைந்திருக்கிறார்கள்.
‘முதல்வரின் முகவரி திட்டம்’, ’மக்களுடன் முதல்வர் திட்டம்’ ஆகியவற்றின் மூலமாக 23 லட்சத்து 9 ஆயிரம் பேர் பயனடைந்திருக்கிறார்கள்.
இந்த திட்டங்களின் பயன்கள் எல்லாம் முறையாக சென்று சேருகிறதா என்று உறுதிசெய்ய இப்போது “நீங்கள் நலமா?” திட்டத்தைத் தொடங்கி வைத்து, நானே மக்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்.
திராவிட மாடல் அரசு
மக்களின் குறைகளை தீர்த்து வைப்பதற்காக இப்படி அடுத்தடுத்து திட்டங்களை அறிவித்து, உடனுக்குடன் தீர்வு காணுகின்ற அரசுதான், இந்த திராவிட மாடல் அரசு! என்பதை பெருமையோடு நான் கம்பீரமாக சொல்ல விரும்புகிறேன். அதனால்தான், இந்த அரசை மக்களின் மனச்சாட்சி என்று சொன்னேன்.
இப்படி மகளிர் – மாணவர்கள் – இளைஞர்கள் – முதியோர் –உழவர்கள் – உழைப்பாளர்கள் என்று தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு குடும்பமும் பயனடைகின்ற வகையில் திட்டங்களை பார்த்து பார்த்து செயல்படுத்தி வருகிறோம்.
இப்படி எந்த அரசாவது செயல்பட்டதா? பத்தாண்டுகளாக தமிழ்நாட்டையே சுரண்டினார்களே, அவர்களால், இப்படியெல்லாம் ஏதாவது ஒரு திட்டத்தை நிறைவேற்ற முடிந்ததா?
அதிமுக ஆட்சியில் வேதனை
உங்களுக்காக பாடுபட முடிந்ததா? அவர்களால் இப்படி பட்டியலிட முடியுமா? முடியாது! ஏனென்றால், இந்த தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மக்களுக்கான ஒகேனக்கல் திட்டத்தையே முடக்கியதுதான் அதிமுக ஆட்சியின் சாதனை! சாதனைதான் இல்லையென்றால், அவர்களால் ஏற்பட்ட வேதனை உங்களுக்கே நன்றாக தெரியும்!
வேளாண் கல்லூரி மாணவிகளின் குடும்பத்துக்கு ஏற்பட்ட வேதனையை மீண்டும் விரிவாக நான் இங்கே சொல்ல விரும்பவில்லை! உங்களுடைய திராவிட மாடல் அரசு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டே இருக்கிறது!
இப்படி எப்போதும் உங்களுக்காகவே செயல்படுற அரசுதான், நம்முடைய திராவிட மாடல் அரசு!
மாநிலங்களை சமமாக நடத்துவது இல்லை
அனைத்து மாவட்டங்களையும் சமமாக மதித்து நாம் செயல்படுகிறோம். ஆனால், ஒன்றிய பா.ஜ.க அப்படி மாநிலங்களை சமமாக நினைக்கின்றதா?
ஒன்றிய அரசு என்றால், எல்லா மாநிலங்களையும் மதிக்கணும்! வளர்க்கணும்! ஆனால், இன்றைக்கு ஒன்றியத்தை ஆளுகின்ற அரசு அப்படி செயல்படவில்லை!
மாநிலங்களையே அழிக்க நினைக்குது. மாநிலங்களை அழிக்கிறது மூலமாக நம்முடைய மொழியை – இனத்தை – பண்பாட்டை அழிக்கப் பார்க்கிறது.
மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிக மிக முக்கியமானது நிதி. அந்த நிதி ஆதாரத்தை பறிப்பது மாநில வளர்ச்சிக்கான ஆக்சிஜனை நிறுத்துகின்ற மாதிரி! அதைத்தான் இப்போது செய்து கொண்டு இருக்கிறார்கள்.
மாநிலங்கள் ஒன்றிணைந்ததுதான் ஒன்றிய அரசு! இதை உணராமல் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
வெற்றுப் பயணம்
தேர்தல் நெருங்கி வருகிறது! மாண்புமிகு பிரதமரும் அடிக்கடி சுற்றுப்பயணம் வருகிறார்! இந்த சுற்றுப்பயணங்களைப் பற்றி தமிழ்நாட்டு மக்கள் என்ன நினைக்கிறார்கள். இதை வெற்றுப் பயணங்களாகதான் பார்க்கிறார்கள். இதை சுற்றுப்பயணமாக பார்க்கவில்லை. இந்த பயணங்களால் ஏதாவது வளர்ச்சித் திட்டங்கள் இருக்கிறதா?
எய்ம்ஸ் நாடகம்
2019-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கே இப்போதுதான் கட்டுமானப் பணியை தொடங்கப் போவதாக நாடகம் நடத்துகிறார்கள். தேர்தல் முடிந்ததும் நிறுத்திடுவார்கள்.
சிலிண்டர் விலை
தேர்தல் வருகிறது என்று சிலிண்டர் விலையை குறைத்ததுபோல அறிவிக்கிறார் பிரதமர். 10 ஆண்டுகளாக 500 ரூபாய்க்கும் மேல உயர்த்திட்டு, இப்போது 100 ரூபாய் மட்டும் குறைக்கிறது, அப்பட்டமான மோசடி வேலையில்லையா இது? இதைவிட மக்களை ஏமாற்றுகிற செயல் இருக்க முடியுமா?
சென்னையில் வெள்ளம் வந்தபோது, பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வராத பிரதமர் மோடி - தூத்துக்குடியில் வெள்ளம் வந்தபோது பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வராத பிரதமர் மோடி - இப்போது மட்டும் அடிக்கடி வருகிறாரே? என்ன காரணம்? தேர்தல் வரப் போகிறது. ஓட்டு கேட்டுதான் வருகிறார் என்று மக்களுக்குத் தெரியும்.
'தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சி நிதியை கொள்ளையடிக்க நான் விடமாட்டேன்' என்று சொல்லி இருக்குறார் பிரதமர் அவர்கள். தமிழ்நாட்டுக்கு அவர் என்ன வளர்ச்சி நிதியை கொடுத்திருக்கார்?
ஜி.எஸ்.டி வரி இழப்பீட்டு நிறுத்தியதால், தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய 20 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கவில்லை. வெள்ள நிவாரணமாக நாம் கேட்ட 37 ஆயிரம் கோடிய தரவில்லை.
மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு பணம் தரவில்லை, ஒப்புதலும் வழங்கவில்லை.பிரதமர் வீடுகட்டும் திட்டத்துக்கு முக்கால் பங்கு பணம் தருவது மாநில அரசுதான்.
வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குகிறற ஜல்ஜீவன் திட்டத்துக்கு மாநில அரசின் பங்களிப்பு 50 விழுக்காடு.
இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது மாநில அரசிடம் பணம் வாங்கித்தான் தன்னுடைய ஸ்டிக்கரை பிரதமர் ஒட்டிக்கிறார் என்று அவருக்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன்.
இன்னும் கேட்கவேண்டும் என்றால், ஒன்றிய அரசுக்கு வரி வருவாய் எங்கே இருந்து வருகிறது? மாநிலங்களின் வரியாக இருந்தாலும், ஒன்றிய வரியாக இருந்தாலும் மாநிலங்களில் இருக்கின்ற மக்கள் கொடுக்கின்ற வரிதான்!
வெறும் கையால் முழம்
வெறும் கையால் முழம் போடுவது என்று சொல்லுவார்கள். அதுபோல, தமிழ்நாட்டுக்கு வந்து வெறும் கையால் முழம் போட்டுக் கொண்டு இருக்கிறார் நம்முடைய பாரதப் பிரதமர் மோடி. தேர்தல் நேரத்தில் மட்டும்தான் பிரதமருக்கு மக்கள் மேல பாசம் பொங்கும்... இதை தமிழ்நாட்டு மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். மக்களான நீங்கள் எங்களோடு இருக்கிறீர்கள்.
மக்களும், அரசும், திராவிட முன்னேற்றக் கழகமும் ஒரே குடும்பமாக செயல்பட்டு வருகிறோம். இதைத்தான் குடும்ப ஆட்சி என்று விமர்சிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் நடப்பது கோடிக்கணக்கான குடும்பங்களின் நலனுக்காக நடக்கின்ற ஆட்சி தான் இது! அதனால்தான் உங்கள் குடும்ப விழாவுக்கு வருகின்ற மாதிரி நீங்கள் எல்லாம் இங்கு உரிமையுடன் வந்திருக்கிறீர்கள்.
இதே உணர்வோடும், வளமோடும், நலமோடும் வாழ்வோம்! தமிழ்நாட்டையும் வாழ வைப்போம்! இந்தியாவுக்கும் வழிகாட்டியாக நாம் மாறுவோம்!” எனத் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments