தேர்தல் நன்கொடை பத்திர விவரங்களை நாளைக்குள் சமர்ப்பிக்க எஸ்பிஐ-க்கு கெடு - உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகள்
புதுடெல்லி:
மார்ச் 6-ம் தேதி வரை கால அவகாசம்
தேர்தல் பத்திரத் திட்டம் சட்டவிரோதமானது என்று கூறி, அந்த நடைமுறையை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. மேலும், 2019-ம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரம் வழங்கியது தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிடப்பட்டது. இதற்கு மார்ச் 6-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
மனு தாக்கல்
இந்நிலையில், “தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களைத் தரவிறக்கம் செய்து, அவற்றை வகைப்படுத்தித் தருவது சிக்கலான நடவடிக்கை. எனவே முழு விவரங்களை வெளியிடுவதற்கு ஜூன் 30-ம் தேதி வரை கால அவகாசம் வேண்டும்” என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மார்ச் 4-ம் தேதி எஸ்பிஐ வங்கி மனு தாக்கல் செய்திருந்தது.
உச்ச நீதிமன்றம் வழங்கிய காலக்கெடுவுக்குள் எஸ்பிஐ, தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்காத நிலையில், அந்த வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
விசாரணை
இதற்கிடையே, கால அவகாசம் கோரி எஸ்பிஐ வங்கி தாக்கல் செய்த மனு இன்று (மார்ச் 11), தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையில், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர் கவாய், ஜே.பி பர்திவாலா, மற்றும் மனோஜ் மிஸ்ரா அகிய 5 பேர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அடுக்கடுக்கான கேள்விகள்
விசாரணையின்போது, “இது மிகவும் சுலபமான விஷயம். இது தெரிந்துதான் தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவை பிறப்பித்தோம். இது ஒன்றும் புதிய வேலை கிடையாது. வங்கி, இதற்கு முன்பும் இதேபோன்ற வேலைகளை செய்துள்ளது. அப்படி இருக்கும்போது தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட கால அவகாசம் கேட்பது ஏன்?.
கால அவகாசம் கேட்பது ஏன்?.
பட்டியலை வெளியிடுவது மிகவும் சுலபமான காரியம். விவரங்கள் அனைத்தும் மும்பையில் உள்ள எஸ்பிஐயின் தலைமை அலுவலகத்தில் தான் சேகரிக்கப்பட்டுள்ளன. எனவே, தகவலை திரட்டுவது அவ்வளவு கடினமான விஷயமா என்ன?. ஏற்கனவே சில ஆவணங்கள் தேர்தல் ஆணையத்திடம் இருக்கின்றன. அவர்கள் நீதிமன்றத்தில் அதை சமர்ப்பித்துள்ளனர். அப்படி இருக்கும்போது நீங்கள் மட்டும் கால அவகாசம் கேட்பது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
26 நாட்களாக என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?
பட்டியலை வெளியிட நாங்கள் தீர்ப்பு வழங்கி 26 நாட்கள் ஆகிவிட்டன. கடந்த 26 நாட்களாக என்ன செய்துகொண்டிருந்தீர்கள். என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?. வங்கி தரப்பில் இருந்து நேர்மையான செயல்பாட்டை நாங்கள் எதிர்நோக்குகிறோம். தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட வேண்டியது அவசியம்.
தகவலை திரட்டுவது கடினமா?
இணையதளம் உள்ள இந்த காலகட்டத்தில் தகவலை திரட்டுவது முடியாத காரியமா என்ன?. உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கிய இந்த தீர்ப்பை ஒரு வங்கியின் மேலாளர் ஒருவர் மேல்முறையீடு செய்து எதிர்க்கிறார் என்றால்ர் இது மிகவும் தீவிரமான விஷயமாகும்.” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அடங்கிய ஐந்து நீதிபதிகள் அமர்வு எஸ்பிஐ வங்கிக்கு சரமாரியாகக் கேள்விகளைக் கேட்டனர்.
நாளை மாலைக்குள் சமர்ப்பிக்க கெடு
தொடர்ந்து எஸ்பிஐ வங்கி தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், “கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
மார்ச் 15-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்
எஸ்பிஐ சமர்ப்பிக்கும் விவரங்களை தேர்தல் ஆணையம் மார்ச் 15-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும். விவரங்களை சமர்ப்பிக்கத் தவறினால் எஸ்பிஐ அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தொடரப்படும்.” என்று கூறினர்.
மனு தள்ளுபடி
மேலும், தேர்தல் பத்திர விவரங்களை சமர்ப்பிக்க ஜூன் 30 வரை கால அவகாசம் கேட்ட எஸ்பிஐ வங்கியின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உடையும் ரகசியம்
இந்நிலையில், இதன் மூலம் இந்த நன்கொடைத் திட்டம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இதுவரையிலான காலகட்டத்தில் பயனடைந்த அரசியல் கட்சிகள், அவற்றுக்கு நன்கொடை அளித்தவர்கள் பற்றிய முழு விவரங்களும் (இதுவரை ரகசியம் எனப் பாதுகாக்கப்பட்டவை) மக்களுக்குத் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், ஜூன் மாதம் வரை கால அவகாசம் கேட்கும் பாரத ஸ்டேட் வங்கியின் கோரிக்கை ஏற்கப்பட்டால், யார், யாருக்கு நன்கொடைகள் வழங்கினார்கள், யார் பெற்றார்கள் என்ற விவரம் மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் வெளித் தெரிய வராமலேயே போய்விடும் ஆபத்து இருந்த நிலையில், உச்ச நீதிமன்றம், கால அவகாசம் கோரிய மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.
இதுவரையிலும் மொத்தம், ரூ. 16 ஆயிரத்து 518 கோடி பெறுமதியுள்ள தேர்தல் நன்கொடைப் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி விற்றிருக்கிறது. அதாவது, இவ்வளவு பெரிய தொகையும் இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகளுக்கு ‘ரகசிய’ நன்கொடைகளான ‘யார் யாராலோ’ வழங்கப்பட்டிருக்கிறது. யார் யார் என்பதை மக்களுக்குத் தெரிவியுங்கள் என்றுதான் கூறியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
No comments
Thank you for your comments