கிரிப்டோ கரன்சியில் முதலீடு - ரூ.46 லட்சம் மோசடி - கணவன் மனைவி கைது
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய கூறி ரூபாய் 46 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கணவன் மனைவி இருவரையும் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது வழக்கு பதிவு செய்தனர்.
தமிழகத்தில் ஐஎப்எஸ் , ஆருத்ரா மற்றும் கிரிப்டோ கரன்சி எனும் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என்ற ஆசையில் பல்லாயிரக்கணக்கானோர் முதலீடு செய்து, தற்போது அது அனைத்தும் மோசடி என தெரிந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் இந் நிறுவனங்களின் உரிமையாளர்கள் தலைமறைவாகியும், கைது செய்யப்பட்டும் பணம் திரும்ப கிடைக்குமா என்ற நிலையில் முதலீடு செய்தவர்கள் உள்ளனர்.
அவ்வகையில் திருவண்ணாமலை மாவட்டம் அப்துல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் , அவரது உறவினரான வெம்பாக்கம் வட்டம் , சித்தாத்தூர் பகுதியை சேர்ந்த மனோகரன் மற்றும் அவரது மனைவி கிரிஜா ஆகியோரின் ஆசை வார்த்தைகளை நம்பி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மனோகரன், கிரிஜாவை வரவழைத்து 4 மாதங்களில் பல்வேறு தவணைகளில் ரூபாய் 66 லட்ச ரூபாய் அளித்துள்ளனர்.
ஒரு லட்சம் முதலீடு செய்தால் 18 ஆயிரம் வட்டி தருவதாக கூறிய நிலையில் ரூபாய் 20 லட்சம் மட்டுமே திருப்பி கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் விஸ்வநாதன் முதலீடு செய்த பணத்தை திருப்பி கேட்டபோது, அந்த பணம் வேறு ஒருவரிடம் முதலீடு செய்துள்ளதாகவும் அந்த பணம் ஏமாற்றப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தந்தால் திருப்பி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக மனோகரன் , மனைவி கிரிஜா மற்றும் மனோகரனின் தந்தை மதியழகன் ஆகியோர் மீது காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விஸ்வநாதன் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் உத்தரவின் பேரில், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மணிமேகலை அறிவுறுத்தல் பேரில் ஆய்வாளர் மணிவண்ணன் வழக்கு பதிவு செய்து மனோகரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர்களது வங்கிக் கணக்கில் இருந்து கைப்பற்றிய ஆவணங்கள் அடிப்படையில் நம்பிக்கை மோசடி செய்தது உறுதி ஆகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து இரு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து மனோகரனின் தந்தை மதியழகன் மற்றும் மனோகரனின் மனைவி கிரிஜா ஆகியோரையும் கைது செய்துள்ளனர்.
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என மோசடியில் ஈடுபட்டு கைதாகி உள்ள கணவன் மனைவி, தந்தை ஆகியோர் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இவர்கள் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்த நிலையில் புகார்தாரர்களின் புகார் பெற்றால் மட்டுமே இவர் மீது கூடுதல் வழக்குகள் பதிவு செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
No comments
Thank you for your comments