காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் பாலாலயம்
காஞ்சிபுரம், பிப்.26:
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுரங்கள் புதுப்பிக்கும் பணிக்காக பாலாலயம் நடைபெற்றது.
முருகப்பெருமான் புலவராக வந்து தமிழ்ப்புலவர்களின் சந்தேகத்தை தீர்த்து வைத்த பெருமைக்குரிய கோயில் காஞ்சிபுரத்தில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட இக்கோயில் ராஜகோபுரம், பரிவார தெய்வங்களின் கோபுரம் ஆகியனவற்றுக்கு பாலாலயம் செய்வதற்கான யாகசாலை பூஜைகள் கோயில் தலைமை பூஜகர் கே.ஆர்.காமேசுவர சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றன.
பின்னர் கோயில் கொடி மரம் அருகில் உள்ள மண்டபத்தில் உருவப்படங்கள் வரைந்து வைக்கப்பட்டிருந்த பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.
கும்பாபிஷேக விழாவில் ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் குமாரகாளத்தி, தொழிலதிபர்கள் உதயகுமார்,டி.சந்துரு, ஏகாம்பரநாதர் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் வ.ஜெகன்னாதன், முன்னாள் உறுப்பினர் ரகு, அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமி காந்தன் பாரதி,அமைச்சர் சேகர்பாபுவின் மனைவி சாந்தி, ஆய்வாளர் பிரீத்திகா ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
பாலாலயம் குறித்து கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன் கூறுகையில் பாலாலயம் செய்யப்பட்டிருப்பதால் சுவாமி வெளி வீதியுலா நடைபெறாது.
ஆலய வளாகத்திற்குள் வழக்கம் போல செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறும் வெள்ளித்தேரோட்டம், உள்புறப்பாடு ஆகியன நடைபெறும்.
கோபுர வர்ணப்பூச்சு உட்பட ரூ.27லட்சம் மதிப்பில் திருப்பணிகளை விரைவில் நிறைவு செய்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ந.தியாகராஜன் தெரிவித்தார்.
No comments
Thank you for your comments