Breaking News

காஞ்சிபுரம் புத்தகத் திருவிழாவில் ஆர்வத்துடன் புத்தங்கள் வாங்கிய மாணவ-மாணவிகள்

காஞ்சிபுரம், பிப்.13:

காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் புத்தகத்திருவிழாவில் செவ்வாய்க்கிழமை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ,மாணவிகள் ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்குவதை காண முடிந்தது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் நிகழ் மாதம் 9 ஆம் தேதி முதல் வரும் பிப்.19 ஆம் தேதி வரை 2வது புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.

தினசரி காலையில் பல்வேறு பள்ளி மாணவ,மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகளும்,மாலையில் பட்டிமன்றம்,கருத்தரங்கம் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன. 

இப்புத்தக கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட அரங்குகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஏராளமான புத்தகங்கள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

சிற்றுண்டி வசதி, குளிர்பானங்கள் விற்பனை,மூலிகை தேநீர் மற்றும் ஆவின் பால் பொருட்கள் விற்பனை,சணல் பொருட்கள் விற்பனையகம் ஆகியனவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியன் வங்கியின் சுயதொழில் பயிற்சி மையம் மற்றும் மாவட்ட வேலைவாய்பபு அலுவலகம் ஆகியனவற்றில் நடத்தப்பட்டு வரும் இலவசப் பயிற்சி பற்றிய விபரங்கள், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் மூலம் அறிவியல் கண்டுபிடிப்புகள்,எழுதுக அமைப்பின் சார்பில் பள்ளி மாணவர்கள் எழுதிய புத்தகங்கள் ஆகியனவும் புத்தக கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

செவ்வாய்க்கிழமை 5 வது நாளாக காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர்கள் கூட்டம், கூட்டமாகவும், தனியாகவும் புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்குவதையும் காண முடிந்தது. 10 சதவிகிதம் தள்ளுபடியுடன் புத்தகங்கள் விற்பனைக்கு கிடைக்கிறது.

கல்லூரி மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான புத்தகங்களையும், பள்ளி மாணவர்கள் தன்னம்பிக்கை தொடர்பான புத்தகங்களையும் அதிகமாக வாங்கினார்கள்.

மாலையில் புத்தகத் திருவிழா கூட்ட அரங்கில் சொல்லின் வெளிச்சம் என்ற தலைப்பில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனும், தேடலும், வரலாறும் என்ற தலைப்பில் திரைப்பட நடிகர் பொன்வண்ணனும் பேசினார்கள்.

இன்று புதன்கிழமை மாலையில் இலக்கியமும், சினிமாவும் என்ற தலைப்பில் அஜய்பாலாவும், தலைமை தாங்க வா என்ற தலைப்பில் பர்வீன்.சுல்தானாவும் பேசுகிறார்கள். ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது.

 

No comments

Thank you for your comments