உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்ட ம் - ஆட்சியர் நேரில் கள ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்தில் “உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இன்று (21.02.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, குறைகளைக் கேட்டறிந்தார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி, ”மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் "உங்களைத் தேடி உங்கள் ஊரில் " என்ற புதிய திட்டத்தினை அறிவித்தார்.
அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின்படி, இன்று காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், பெருநகர் ஊராட்சியில் உள்ள நரிக்குறவர் குடியிருப்புகளை பார்வையிட்டு, அங்கு வசிக்கும் மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, மானாம்பதி ஊராட்சியில் செயல்பட்டு வரும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு, சுகாதார நிலையத்திலுள்ள இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை மையம் மற்றும் கருப்பைவாய் மற்றும் மார்பக பரிசோதனை மையத்தினையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, மருந்தகம் அறையினை பார்வையிட்டு, மருந்துகளின் இருப்பு நிலைகளை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து கட்டு கட்டும் பிரிவு, நோயாளிகளுக்கு ஊசி போடும் அறையையும் பார்வையிட்டு, சிகிச்சைக்கு வந்த நோயாளிகளிடம் வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை குறித்து கேட்டறிந்து, தாய்மார்கள் பாலூட்டும் அறையையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, சுகாதார நிலையத்தில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் சுகாதார மையத்தையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மானாம்பதி ஊராட்சி, பஜார் வீதியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்து, ஊராட்சியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை பார்வையிட்டு, மாணவ/மாணவிகளிடம் கலந்துரையாடி, கற்றல் திறனை கேட்டறிந்தார் பின்பு பள்ளியில் தயார் செய்யும் மதிய உணவு அறையினை பார்வையிட்டு, உணவின் தரத்தினை ஆய்வு மேற்கொண்டு, ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து உத்திரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட நவீன எரிவாயு தகன மேடையை பார்வையிட்டு, வேடப்பாளையம் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் குளம் ஆழப்படுத்தும் பணியையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் முதல்நிலை அலுவலர்கள் மேற்கொண்ட ஆய்வு விவரங்களை உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் விவரங்களை கேட்டறிந்து, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.வை.ஜெயக்குமார், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.மு.கலைவாணி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கூட்டுறவு துறை சார்பில், 5 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.35,05,000/- மதிப்பிலான வங்கி கடன்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி, “உங்களை தேடி உங்கள் ஊரில்” நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்தார்கள்.
No comments
Thank you for your comments