Breaking News

மதுரையில் பயங்கரம் - பாஜக மாவட்ட செயலாளர் ஓட ஓட வெட்டிப் படுகொலை

மதுரை:

மதுரையில் இன்று அதிகாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட செயலாளர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து அண்ணாநகர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள கீழ வல்லானந்தபுரம் பகுதியை சேர்ந்தவரான சக்திவேல் (35). இவர் மதுரை மாநகர் அண்ணாநகர் பகுதியில் தேவர் குறிஞ்சிநகர் பகுதியில் வசித்து வருகிறார். 

இவர் மதுரை மாவட்ட பாஜக ஓ.பி.சி. அணியின் மாவட்ட செயலாளராக பதவி வகித்துவருகிறார்.  மேலும் இவர் மதுரை சிந்தாமணி பகுதியில் ரைஸ்மில் நடத்தி வருவதோடு, பைனான்ஸ் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.

நேற்று இரவு வழக்கமான பணிகளை முடித்துவிட்டு, வீடு திரும்பிய சக்திவேல் தூங்க சென்றார். இதில் அதிகாலை எழுந்த அவர் குளித்துவிட்டு சங்கு நகர் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான ரைஸ்மில் குடோனுக்கு மோட்டார் சைக்கிளில் தனியாக சென்று கொண்டிருந்தார். 

அவர் வண்டியூர் டோல்கேட் அருகே வந்தபோது திடீரென்று மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் அவரை முந்திச்சென்று வழிமறித்தது. இதனை சற்றும் எதிர்பாராத சக்திவேல் அதிர்ச்சியில் உறைந்தார்.



அந்த கும்பலிடம் நீங்கள் யார், உங்களுக்கு என்ன வேண்டும் என்று சக்திவேல் கேட்டார். ஆனால் பதில் எதுவும் கூறாத அந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களை வெளியில் எடுத்தனர். 

இதனால் பதட்டம் அடைந்த சக்திவேல் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் விடாமல் சில மீட்டர் தூரம் வரை ஓட ஓட விரட்டிய அவர்கள் ஒரு கட்டத்தில் அவர் தப்பாதவாறு சுற்றி வளைத்தனர். பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சக்திவேலை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். 

அவரை படுகொலை செய்த மர்ம கும்பல் உடனடியாக அங்கிருந்து தாங்கள் வந்த வாகனங்களில் தப்பி விட்டனர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக அண்ணா நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட பா.ஜ.க. ஓ.பி.அணி அணி மாவட்ட செயலாளர் சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சக்திவேலை கொலை செய்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

கொலைக்கும்பல் யார்? அவர்கள் எந்த வழியாக தப்பினர்? என்பது குறித்து முக்கிய சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.கொலை செய்யப்பட்ட சக்திவேல் நடத்தி வந்த ரைஸ்மில் தொடர்பாக கடந்த சில மாதங்களாக முன்விரோதம் இருந்து வந்ததாகவும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

எனவே தொழில் போட்டியில் சக்திவேல் கொலை செய்யப்பட்டாரா?அதேபோல் சமீபத்தில் சரக்கு வாகனம் ஒன்று விற்பனை தொடர்பாக இவருக்கும், ஒரு சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த பிரச்சனையில் இந்த கொலை சம்பவம் நடந்ததா? அல்லது பைனான்ஸ் தொழிலில் பணம் கொடுக்கல், வாங்கலில் கொலை அரங்கேறியுள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையுண்ட சக்திவேல் உடலை பார்க்க அரசு ஆஸ்பத்திரியில் பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டனர். இதனால் அங்கும் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் மதுரையில் பெரும் பரபரப்பும், பதட்டமும் அதிகரித்துள்ளது.


No comments

Thank you for your comments