Breaking News

பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்

காஞ்சிபுரம், ஜன.22:

காஞ்சிபுரம் அருகே பெருநகரில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை அதிகாலையில் பட்டு வதனாம்பிகைக்கும், பிரம்ம புரீஸ்வரருக்கும்  திருக்கல்யாணம் நடைபெற்றது.

படவிளக்கம்: திருக்கல்யாணத் திருக்கோலத்தில் காட்சியளித்த பட்டு வதனாம்பிகை சமேத பிரம்மபுரீஸ்வரர்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே பெருநகரில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த பட்டு வதனாம்பிகை சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்.இக்கோயிலில் தைப்பூசத் திருவிழா நிகழ் மாதம் 17 ஆம் தேதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனையொட்டி தினசரி காலையிலும்,மாலையிலும் சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி வீதியுலா வந்து அருள்பாலித்து வருகின்றனர்.விழாவின் 5 வது நாள் நிகழ்வாக பட்டு வதனாம்பிகைக்கும், பிரம்மபுரீஸ்வரருக்கும் ஆகம விதிகளின்படி திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதனையடுத்து சுவாமியும், அம்மனும் ரிஷபவாகனத்தில் அலங்காரமாகி நகரின் முக்கிய வீதிகளில் திருவீதியுலா வந்தனர்.

வரும் 25 ஆம் தேதி காலையில் 63 நாயன்மார்கள் உற்சவமும்,மறுநாள் 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 10வது நாள் நிகழ்ச்சியாக செய்யாற்றில் தைப்பூசத்தன்று 21 ஊர்களைச் சேர்ந்த சுவாமிகள் ஒன்றாக இணைந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கவுள்ளனர்.

வரும் 27 ஆம் தேதி சனிக்கிழமையுடன் விழா நிறைவு பெறுகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை தொண்டை மண்டல சைவ வேளாளர் மரபினர்கள் மற்றும் கோயில் தக்கார் சு.வஜ்ஜிரவேலு ஆகியோர் செய்திருந்தனர்.


No comments

Thank you for your comments