கோவையில் நகைக்கடையில் கொள்ளைபோன நகைகள் மீட்பு
கொள்ளையன் வீட்டை சுற்றிவளைத்தபோது தப்பியோட்டம்
கோவை :
நகைக்கடையில் கொள்ளை
கோவை 100 அடி ரோட்டில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நகைக்கடையில் கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. பல கோடி ரூபாய் மதிப்பிலான வைரம், பிளாட்டினம், தங்கம் உள்ளிட்ட நகைகள் கொள்ளை போனது.
இந்த கொள்ளை குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடையில், இருந்த சி.சி.டி.வி கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் என்பது தெரியவந்தது.
முகமுடி
நள்ளிரவு நேரத்தில் புகுந்த கொள்ளையன் ஏ.சி. வெண்டிலேட்டரை உடைத்து கொண்டு கடைக்குள் சென்றுள்ளார். அங்கு ஷோகேஸ்களில் இருந்த நகைகளை தேர்ந்தெடுத்து கடையில் இருந்த பையில் வைத்து எடுத்து சென்றது கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. முகத்தை கேமிராவில் இருந்து மறைக்க தனது மேல் சட்டையை பயன்படுத்தி உள்ளார். எந்த இடத்திலும் முகம் தெரியாமல் இருக்க உஷாராக இருந்துள்ளான் கொள்ளையன்.
மேலும் நகைகளை கொள்ளையடித்து விட்டு கடையில் இருந்து வெளியில் வந்து, சில அடி தூரம் நடந்து சென்றதும், பின்னர் அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏறி உக்கடம் பஸ் நிலையத்திற்கு சென்று பொள்ளாச்சி பஸ்சில் தப்பி செல்வதும் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. இதனால் கொள்ளையன் பொள்ளாச்சி, பழனி, உடுமலை போன்ற பகுதிகளுக்கு சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
அடையாளம் தெரிந்தது
இதையடுத்து தனிப்படை போலீசார் பொள்ளாச்சி, பழனி, உடுமலை, பெங்களூரு, சேலம், ஓசூர் போன்ற பகுதிகளுக்கும் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.மேலும் கொள்ளையனின் உருவம், நடை, செயல்பாடு ஆகியவற்றை வைத்து அவர் பழைய குற்றவாளியா? என்பது குறித்தும் போலீசார் ஆய்வு செய்தனர்.
பொள்ளாச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகள் என அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு கொள்ளையனை தேடி வந்தனர். இந்த நிலையில், கோவை நகைக்கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபரின் அடையாளம் தெரியவந்தது.
அரூரை சேர்ந்தவர்
நகைக்கடையில் கொள்ளையடித்த நபர் தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த விஜய் (வயது28). இவர் மீது தர்மபுரி மாவட்டத்தில் கொள்ளை, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுதொடர்பாக தர்மபுரி போலீசார் அவரை கைது செய்து, கோவை மத்திய ஜெயிலில் அடைத்து இருந்தனர். அப்போது அவருக்கு கோவை மத்திய ஜெயிலில் போக்சோ வழக்கில் கைதாகி இருந்த ஆனைமலையை சேர்ந்த சுரேஷ் என்பவரின் நட்பு கிடைத்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் ஜெயிலில் இருந்து வெளியில் வந்தார்.
பின்னர் மீண்டும் தர்மபுரிக்கு சென்றார். அப்போது மீண்டும் அவரை வேறு வழக்கில் போலீசார் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுத்தனர். இதனை அறிந்ததும், விஜய் இங்கிருந்தால் நாம் மாட்டிக்கொள்வோம் என்பதால், வேறு எங்காவது செல்ல நினைத்தார்.
வாடகை வீடு
அப்போது அவருக்கு ஜெயிலில் அறிமுகமான சுரேஷின் நினைவு வந்தது. உடனே அவரை தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் தர்மபுரியில் இருந்து கோவைக்கு தனது மனைவியுடன் வந்த அவர், ஆனைமலையில் வீடு எடுத்து வாடகைக்கு தங்கி இருந்தார்.இங்கு வந்த பின்னரும், மீண்டும் விஜய் சிறு, சிறு திருட்டுகளில் ஈடுபட்டு தனது வேலையை காட்ட தொடங்கியுள்ளார். சிறியதாக திருடி சேர்க்க முடியாததால், பெரிதாக ஏதாவது திருட்டில் ஈடுபட்டு சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டுள்ளார்.
அதன்படியே கோவையில் உள்ள நகைக்கடையில் நகைகளை கொள்ளையடித்தார். பின்னர் தான் கொள்ளையடித்த நகைகளில் பாதியை அரூரில் உள்ள தனது தாய் வீட்டிலும், மற்றொரு பாதியை ஆனைமலையில் உள்ள வீட்டிலும் வைத்தார்.
நகைகள் மீட்பு
இந்த நிலையில் ஆனைமலையில் விஜய் இருப்பதாக கோவை தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதேபோல் கோவையில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோ காட்சிகளை பார்த்த தர்மபுரி போலீசாரும், விஜயை கைது செய்ய கோவைக்கு வந்தனர். பின்னர் கோவை தனிப்படை போலீசார் மற்றும் தர்மபுரி போலீசார் இணைந்து ஆனைமலை பகுதிக்கு சென்றனர். அங்கு விஜய் தங்கி இருந்த வீட்டை சுற்றி வளைத்த போலீசார் அவரை வெளியில் வர எச்சரிக்கை விடுத்தனர்.
போலீசார் தன்னை சுற்றி வளைத்ததை அறிந்ததும், விஜய் தனது வீட்டின் ஓட்டை பிரித்து மேல் பகுதி வழியாக வெளியில் வந்து, போலீசாரின் கண்ணில் படாமல் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். சிறிது நேரம் கழித்து போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்த போது விஜய் வீட்டில் இல்லை. இதையடுத்து போலீசார் அவரது மனைவியை பிடித்தனர். அவரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும் அவரது வீடு மற்றும் அரூரில் விஜயின் தாய் வீட்டில் இருந்த 2¾ கிலோ நகையையும் மீட்டனர்.
தப்பியோட்டம்
மேலும் விஜய்க்கு வீடு பார்த்து கொடுத்த சுரேஷ் என்பவரை பிடித்து நகை கொள்ளையில் தொடர்பு இருக்கிறதா? என விசாரித்தனர். விசாரணையில் அவருக்கு தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் தப்பியோடிய விஜயை வலைவீசி தேடி வருகின்றனர். கொள்ளையன் சிக்கிய நிலையில் வீட்டை சுற்றி வளைத்த 2 மாவட்ட போலீசாரும் அவனை பிடிக்க முடியாமல் கோட்டை விட்டு விட்டனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments
Thank you for your comments