Breaking News

''இண்டியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்'' - தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

 சென்னை, அக்.2-

"ஒன்றியத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க முடியாது; இண்டியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்ற கருத்து பரவலாக ஏற்பட்டு விட்டது. எனவே, இந்த நேரத்தில் நமது பொறுப்பும் கடமையும் அதிகமாகி உள்ளது" என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.


கூட்டம்

தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான  மு.க.ஸ்டாலின் தலைமையில், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், தொகுதிப் பார்வையாளர்கள் ஆகியோர் பங்கேற்ற கலந்தாலோசனைக் கூட்டம், காணொலிக் காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது. 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:- 

பொது முக்கியத்துவம் வாய்ந்த சில கருத்துகளைப் பரிமாறிக் கொண்டு, விரைந்து செயல்பட வேண்டிய காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். அதனால்தான் உடனடியாகக் காணொலி மூலமாக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல்

நம்மை எதிர்நோக்கி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை உள்ளிட்ட நாற்பது தொகுதியிலும் நாம் வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில் அடைவது போன்ற வெற்றியை இந்தியா முழுமைக்கும் அடைய வேண்டும் என்பதற்காகத்தான் இண்டியா கூட்டணியை அமைத்துள்ளோம். 

அகில இந்தியக் கட்சிகளும் பல்வேறு மாநிலங்களை ஆளும் கட்சிகளும், வலுவான மாநிலக் கட்சிகளும், இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. பாரதிய ஜனதா கட்சி ஒன்றியத்தில் ஆட்சி அமைக்க முடியாது; இண்டியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்ற கருத்து பரவலாக ஏற்பட்டு விட்டது. எனவே, இந்த நேரத்தில் நமது பொறுப்பும் கடமையும் அதிகமாகி உள்ளது.

தேர்தல் பணி

நாடாளுமன்றத் தேர்தல் பணியை கடந்த ஆறு மாதத்துக்கு முன்பே நாம் தொடங்கினோம். நமது வெற்றிக்கு அடித்தளமாக விளங்கக்கூடிய வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை நியமித்தோம். இதுவரையில் அவர்களுக்கான மூன்று பயிற்சிபாசறைக் கூட்டங்கள், தேர்தல் சிறப்பு மாநாடுகளைப் போல நடந்துள்ளன.

அடுத்ததாக வடக்கு மண்டல பயிற்சி பாசறைக் கூட்டம் திருவண்ணா மலையிலும், சென்னை மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டமும் நடைபெறவுள்ளது. இந்தப் பயிற்சி பாசறைக் கூட்டங்களில் நாம் எடுத்துச் சொன்னதைச் செயல்படுத்தினாலே போதும். முழுமையான வெற்றியை நாம் அடைந்து விடலாம்.

உழையுங்கள்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை உள்ளிட்ட 39 தொகுதிகளை வென்றோம் என்றால், நடக்க இருக்கும் தேர்தலில் 40 தொகுதிகளையும் வென்றாக வேண்டும். எந்தவொரு தனிமனிதரையும் விட இயக்கமும், இயக்கம் அடைய வேண்டிய வெற்றியும்தான் முக்கியம். 

🔥  கிராம சபை - முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்லும் சுவாரஸ்யமான வரலாறும்.. வேண்டுகோளும்..


மக்கள் நன்றாக இருக்கிறார்கள். அதனை வாக்குகளாக மாற்றுவதற்கு உழையுங்கள். உழைப்பும் செயல்பாடும்தான் வெற்றியைப் பெற்றுத் தரும். திட்டமிட்டு உழையுங்கள். தி.மு.க. கூட்டணி அனைத்துத் தொகுதியிலும் வெற்றி பெற உழையுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

No comments

Thank you for your comments