Breaking News

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது மக்களை அதிகம் பாதிக்கும் - விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆட்சியரிடம் மனு


படவிளக்கம் :  பரந்தூர் விமான நிலைய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யுமாறு கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம்,  விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கே.நேரு, என்.சாரங்கன் கோரிக்கை மனு  அளித்தபோது எடுத்த படம்.


காஞ்சிபுரம், அக்.11:

பரந்தூரில் விமான நிலையம் அமைந்தால் நீர் ஆதாரங்கள் அழிவதோடு மக்களையும் அதிகமான அளவில் பாதிக்கும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனை புதன்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கே.நேரு,மாவட்ட தலைவர் என்.சாரங்கன் ஆகியோர் காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி மோகனை அவரது அலுவலகத்தில் சந்தித்து கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பது.

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாகவும்,நீர்வள ஆதாரங்கள் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு செய்திட தங்களது தலைமையில் 7 பேர் அடங்கிய ஆய்வுக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 

அக்குழுவில் அரசு உயர் அதிகாரிகள், நீர்வளவியல் வல்லுநர்கள் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிய வருகிறது. மக்களின் வாழ்வாதாரம் எந்த வகையிலும் பாதிக்கப்படாமலும்,பாலாற்றுக் கால்வாய்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகள், குளம் குட்டைகள் ஆகியன எதுவும் சேதாரம் ஆகாமல் அமைக்க இயலுமா என்பதையும் குழு நன்றாக ஆய்வு செய்ய வேண்டும்.

விமான நிலையம் அமைக்க 13 கிராமங்களைச் சேர்ந்த 2500 ஏக்கர், அரசு புறம்போக்கு நிலம் 2200 ஏக்கர் உட்பட மொத்தம் 4700 ஏக்கரில் பணிகளும் நடந்து வருகின்றன.

13 ஏரிகள், பள்ளிக்கூடம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சுமார் 8 கி.மீ.தூர பம்ப் கால்வாய் ஆகிய அனைத்தும் அழிக்கப்பட்டும் விமான நிலையம் அமையவுள்ளது. 

முக்கியமாக விமானநிலையம் அமையப் போகும் இடத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குடும்ப வாழ்வாதாரம் இழந்து எதிர்காலம் எப்படி அமையுமோ என்ற அச்சத்துடன் அகதிகளாக வெளியேற்றப்படும் நிலையும் இருந்து வருகிறது.

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கும் வரும் வரத்துக்கால்வாயும் பாதிக்கப்படும். எனவே மக்களை அவரவர்கள் வசிக்கும் இடங்களிலிருந்து இடம் பெயரச் செய்வது, நீர் ஆதாரங்களை அழிப்பது, கட்டுமானப் பணிகளுக்காக நிலத்தை கையகப்படுத்துவது ஆகியன தேவை தானா என்பதை ஆய்வுக்குழுவின் தலைவராக இருக்கும் தாங்கள் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்றும் அம்மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


No comments

Thank you for your comments