Breaking News

கண் மருத்துவத் துறை சார்பில் கண்தானம் இருவார விழா

காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்கம், மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண் மருத்துவத் துறை சார்பில் கண்தானம் இருவார விழா இன்று கொண்டாடப்பட்டது.  


இதனையொட்டி அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மற்றும் சங்கரா செவிலியர் கல்லூரி மாணவியர் கலந்து கொண்ட பேரணியை காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநர் டாக்டர். ஜி.சி.கோபிநாத் கொடியசைத்து துவக்கி வைத்தார். 

இந்த பேரணியில் காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர். சு.மனோகரன், வடக்கு மண்டல மாநில துணை தலைவர் டாக்டர். பி.டி.சரவணன், துணைத் தலைவர் டாக்டர். வெ.இரவி, இணை செயலர் டாக்டர். வி.முத்துக்குமரன் ,மருத்துவக் கல்வி செயலர் டாக்டர். ந.சு.இராதாகிருஷ்ணன், பெண் மருத்துவர்கள் பிரிவு முன்னாள் தலைவர் டாக்டர். பொன். ஆதிரை, காஞ்சிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். வே.பாலகிருஷ்ணன்,நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர். பாஸ்கர்,  அரசு செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் இராஜசேகரன், சங்கரா செவிலியர் பயிற்சி கல்லூரி முதல்வர் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

பேரணி தலைமை மருத்துவமனையில் துவங்கி ரெயில்வே ரோடு வழியாக இராஜாஜி மார்க்கெட் வரை சென்று மீண்டும் தலைமை மருத்துவமனையை வந்தடைந்தது. பேரணியில் சென்ற மாணவியர் கண் தானத்தை வலியுறுத்தும் பதாகைகளை கையில் ஏந்தியும், இருக்கும்போது இரத்த தானம், இறந்த பிறகு கண் தானம், கண் தானம் தருவீர், கண்ணொலி வழங்குவீர் போன்ற கோஷங்களை எழுப்பியவாறும் விழிப்புணர்வு ஏற்படுத்தியவாறு சென்றனர். 

பின்னர் மருத்துவமனை கருத்தரங்க கூடத்தில் நடைபெற்ற தொடர் மருத்துவ கல்வி நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர். சு.மனோகரன் தலைமை தாங்க, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர். வே.பாலகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். 


கண் மருத்துவர்கள் டாக்டர்  அனந்தலஷ்மி, டாக்டர் பிரதீபா, டாக்டர். சக்தி ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் கண்தானம் குறித்து தொடர் மருத்துவ கல்வி நிகழ்ச்சியில் விளக்கமாக எடுத்துரைத்தனர். 

பின்னர் செவிலியர் பயிற்சி மாணவியர் பங்கு பெற்ற பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, வினாடி வினாப் போட்டி, நாடகப் போட்டி, மாறுவேடப் போட்டி போன்ற கண்தானத்தை வலியுறுத்தும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. 

இதுவரை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துமவமனையில் 402 நபர்களிடமிருந்து கண்கள் தானமாகப் பெறப்பட்டிருப்பதாகவும், காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர். சு.மனோகரன் மகன் சந்துரு 2005 ஆம் ஆண்டு 9 வயதிலேயே நோய்வாய்ப்பட்டு அகாலமரணமடைந்தபோது சந்துருவின் கண்கள் அரிமா சங்கம் மூலமாக தானமாக வழங்கப்பட்டதையும், இந்திய மருத்துவ சங்க துணைத் தலைவரான டாக்டர். வெ.இரவி தானே நேரடியாக 106 நபர்களின் கண்களை தானமாக எடுத்தூ வந்துள்ளதையும் இந்த நிகழ்ச்சியில் சுட்டிக்காட்டப்பட்டது.

No comments

Thank you for your comments