காஞ்சி சங்கர மடத்தில் அசாம் முதல்வர் தரிசனம்
காஞ்சிபுரம்,செப்.26:
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்தார்.
அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு வந்தார். அவரை ஸ்ரீமடத்தின் நுழைவு வாயிலில் மேலாளர்கள் கீர்த்திவாசன்,வைத்தியநாதன் ஆகியோர் உட்பட நிர்வாகிகள் மாலை அணிவித்து அழைத்து சென்றனர்.
சங்கர மடத்தின் வரலாறு மற்றும் இதற்கு முன்பு இருந்த மடத்தின் பீடாதிபதிகள் ஆகியோர்களைப் பற்றிய விபரங்களை அதிஷ்டானத்தின் பூஜகர் பாலாஜி விரிவாக விளக்கிக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து மகா பெரியவர் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் தரிசனம் செய்தார். பின்னர் மகா பெரியவர் சுவாமிகளின் அவதார நட்சத்திரமான அவிட்ட நட்சத்திரத்தையொட்டி நடைபெற இருந்த தங்கத் தேரோட்டத்தை முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தேரை வடம் பிடித்து இழுத்து தொடக்கி வைத்தார்.
முன்னதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன்,எஸ்பி எம்.சுதாகர் ஆகியோர் முதல்வரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.சங்கர மடத்தில் தரிசனம் முடித்து காமாட்சி அம்மன் கோயிலுக்கு சென்ற முதல்வரை கோயில் மணியக்காரர் சூரியநாராயணன் மற்றும் ஸ்தானீகர்கள் ஆலயத்துக்குள் வரவேற்று அழைத்து சென்றனர்.
தரிசனத்துக்கு பிறகு கோயில் நிர்வாகத்தின் சார்பில் முதல்வருக்கு காமாட்சி அம்மன் திருஉருவப்படமும் ,பிரசாதமும் வழங்கப்பட்டது.
No comments
Thank you for your comments