Breaking News

வேலூர் பழைய பஸ் நிலையத்தில்: ஓட்டல் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி - கட்டிட கழிவுகளை அப்புறப்படுத்தியபோது பரிதாபம்

இடிந்த கட்டிடத்தை படத்தில் காணலாம்.


வேலூர், செப்.18-

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் கட்டிட கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியின்போது ஓட்டல் சுவர் இடிந்து விழுந்து பெண் இறந்தார்.

இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு-

தனியார் ஓட்டல்

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் தனியார் ஓட்டல் இயங்கி வருகிறது. இந்த ஓட்டலில் உள்ள சமையல் கூட சுற்றுச்சுவரின் ஒரு பகுதி நேற்று  இரவு பெய்த மழையின் காரணமாக இடிந்து விழுந்தது. 

இடிந்து விழுந்த கட்டிட கழிவுகளை அப்புறப்படுத்தும் பணி இன்று நடந்தது. ஓட்டல் உரிமையாளர் சலவன்பேட்டையை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 50), கருகம்புத்தூரை சேர்ந்த வெண்ணிலா, மற்றொரு பெண் ஆகியோர் பணியில் ஈடுபட்டனர்.

பெண் பலி

3 பேரும் கட்டிட இடிபாடுகளை அகற்றிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக மீதி இருந்த சுவர் இடிந்து பணியில் ஈடுபட்டவர்கள் மீது விழுந்தது. 

இடிபாடுகளில் சிக்கி 3 பேரும் படுகாயம் அடைந்தனர். 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கும்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மூன்று பேரில் பெண் ஒருவர் பாதி வழியிலேயே பரிதாபமாக இறந்தார். 

ராமமூர்த்தி மற்றும் வெண்ணிலாவுக்கு அடுக்கம்பாறை வரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

Thank you for your comments