Breaking News

காஞ்சிபுரம் அருகே பட்டப்பகலில் துணிகரம் : மோட்டார்சைக்கிள் திருட முயன்ற 2 வாலிபர்கள் பிடிபட்டனர்

‘தர்மஅடி” கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர் 



காஞ்சிபுரம், செப்.27-

காஞ்சிபுரத்தை அடுத்த குருவிமலை பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவர் காஞ்சிபுரம் செங்கழு நீரோடை வீதி பகுதியிலுள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் வழக்கம் போல் பணிக்கு வந்த ஜெய்சங்கர் தனது மோட்டார்சைக்கிளில் பண வசூல் பணியில் ஈடுபட்டு விட்டு வந்து தனது அலுவலகத்தின் கீழ்பகுதியில்  நிறுத்திவிட்டு அலுவலகத்திற்கு சென்றார்.

இந்த நிலையில் இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் சுற்றிசுற்றி வந்த வாலிபர்கள் இருவர் அங்கிருந்த மோட்டார்சைக்கிளை நோட்டமிட்டவாறு வந்து ஜெய்சங்கரின் மோட்டார்சைக்கிளை திருடி செல்ல முயன்றுள்ளார். அப்போது அதே நிதி நிறுவனத்தில் ஜெய்சங்கர் உடன் பணி புரியும் சக ஊழியர் ஒருவர் , அந்த வாலிபரை பார்த்து சப்தம் இட்டுள்ளார்.

உடனே அருகில் இருந்த பொதுமக்கள் சுதாரித்துக் கொண்டு வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

மேலும் அவரை கயிற்றால் கட்டி வைத்து விட்டனர். பின்னர் தப்பி ஓட நின்ற மற்றொரு வாலிபரையும் பிடித்து வைத்துக் கொண்டு சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்து  இரு சக்கர வாகனத்தை திருட முயன்ற இரு வாலிபர்களையும் போலீசார்  வந்தவுடன் ஒப்படைத்தனர்.

வாலிபர்கள் இருவரையும் சிவகாஞ்சி போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் இருசக்கர வாகனத்தை திருட வந்த வாலிபர்கள் பிடிபட்டதால் அப்பகுதியில் சற்று நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments

Thank you for your comments