Breaking News

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

காஞ்சிபுரம் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகள் பயனாளிகளுக்கு ரூ.  1,94,360/- (ரூபாய் ஒரு லட்சத்து தொண்ணூற்று நாலாயிரத்து முந்நூற்று அறுபது மட்டும்) மதிப்பிலான  நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர்   திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மையம் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (07.08.2023) மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 309 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.


இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 2 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு, ரூ. 1,67,000/- மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரும், 4 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு, ரூ. 27,360/- மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரமும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.பாபு,  காஞ்சிபுரம் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி.ரா.சுமதி,  மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்  திருமதி.இரா.மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments