Breaking News

தாட்கோ சார்பாக 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தொழில் பாதை திட்டம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக,  பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின  மாணாக்கர்களுக்கு மெட்ராஸ்  ஐ.ஐ.டி மற்றும்  தாட்கோ நிறுவனம் இணைந்து  தொழில் பாதை திட்டத்தை செயல்படுத்தப்பட  உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு இந்திய தொழில்நுட்பக் கழகம் (மெட்ராஸ் ஐ.ஐ.டி) மற்றும்  தாட்கோ நிறுவனம் இணைந்து தொழில் பாதை திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளது. இந்திய தொழில்நுட்பக் கழகம்(மெட்ராஸ் ஐ.ஐ.டி) உலகிலேயே முதல் முறையாக  இளங்கலை தரவு அறிவியல் மற்றும் மின்னணு அமைப்புகள் பட்டப்படிப்பு திட்டத்தை தொடங்கியுள்ளது. இதில் பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு (Diploma) முடித்த மாணாக்கர்கள் அனைவரும் விண்ணப்பித்து நான்கு ஆண்டு பட்டப்படிப்பு படிக்கலாம். செப்டம்பர் 2023 ஆம் ஆண்டு வகுப்புகளுக்கான விண்ணப்பங்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் வரவேற்கப்படுகிறது.

இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்கள் சேர்ந்து படிப்பதற்கு இந்திய தொழில்நுட்பக் கழகம் (மெட்ராஸ் ஐ.ஐ.டி) மூலம் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் (JEE) பங்கு பெறத் தேவையில்லை. அதற்கு பதிலாக பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது அதற்கு மேல் இணையான படிப்பு முடித்த மாணாக்கர்களுக்கு  இந்திய தொழில்நுட்பக் கழகம் (மெட்ராஸ் ஐ.ஐ.டி)  மற்றும் தாட்கோ மூலம் அளிக்கப்படும் 4 வார பயிற்சியின் முடிவில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது. மேலும் இத்திட்டத்தில் பயில அனைத்து பாடப்பிரிவு மாணாக்கர்களும் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் ஒவ்வொரு நிலையின் முடிவிலும் வெளியேறும் வழிகள் உள்ளன. மற்றும் மாணாக்கர்கள்  ஒரு அடிப்படைச் சான்றிதழ், ஒன்று அல்லது இரண்டு டிப்ளமோக்கள் அல்லது பட்டப்படிப்புடன் வெளியேறலாம். இவ்வகுப்புகள் இணையதளம் வழியாகவே நடத்தப்படும். நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் தேர்வுகள் நேரில் நடத்தப்படுகின்றன. 

மாணாக்கர்கள் ஒரே நேரத்தில் தங்களது விருப்ப பட்டப்படிப்பினை (Degree Course) படித்துக் கொண்டே இந்திய தொழில்நுட்பக் கழகம் (மெட்ராஸ் ஐ.ஐ.டி) மெட்ராஸ் வழங்கும் Bachelor of Science  in Data Science & Applications and Bachelor of Science in Electronic Systems இதில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பையும் படிக்கலாம். தற்போது இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 12,500-க்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் சேர்ந்து படித்து வருகின்றனர். அடுத்த 5 ஆண்டுகளில் 11 மில்லியனுக்கும் அதிகமாக வேலை வாய்ப்புகள் இத்துறையில் உள்ளது. இத்திட்டத்தில் முறையாக 4 வருடம் Bachelor of Science  in Data Science & Applications படித்து முடிக்கும் மாணாக்கர்களுக்கு இந்திய தொழில்நுட்பக் கழகம் (மெட்ராஸ் ஐ.ஐ.டி) யில் நேரடியாக படிப்பதற்கான Gate Exam எழுதுவதற்கான தகுதியாக ஏற்றுக் கொள்ளப்படும்.

இதற்கான தகுதிகள் பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு (Diploma) தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணாக்கர்களாக இருக்க வேண்டும். மாணாக்கர்கள் தங்களது பன்னிரெண்டாம் வகுப்பு கல்வியில் மொத்த மதிப்பெண்ணில் 60% க்கு மேல் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு ஆங்கிலம் மற்றும் கணித பாடத்தில் 60% க்கு மேல் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். தாட்கோவில் பதிவு செய்த மாணாக்கர்கள் இந்திய தொழில்நுட்பக் கழகம் (மெட்ராஸ் ஐ.ஐ.டி), நடத்தும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

BS(Data Science & Application) க்கான தேர்வு கட்டணம் ரூ.1500/- மற்றும் BS (Electronic Systems)க்கான தேர்வு கட்டணம் ரூ.3000/- ஆகும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5.00 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் மாணாக்கர்களுக்கு தாட்கோ மூலம்  கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இந்திய தொழில்நுட்பக் கழகம் (மெட்ராஸ் ஐ.ஐ.டி), நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான 4 வார பயிற்சியில் கலந்து கொண்டு, அவர்கள் தேர்ச்சி பெற்றால்   இந்திய தொழில்நுட்பக் கழகம் (மெட்ராஸ் ஐ.ஐ.டி),  வழங்கும் Bachelor of Science in (Data Science & Applications)and Electronic Systems பட்டப்படிப்பு சேர்க்கை பெறுவார்கள். இப்படிப்பிற்கான செலவினம் தாட்கோவால் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.


 

No comments

Thank you for your comments