உணவக உரிமையாளரிடம் கத்தி முனையில் மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட நான்கு பேர் கைது
காஞ்சிபுரம் :
மணிமங்கலம் அருகே உணவக உரிமையாளரிடம் கத்தி முனையில் மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட நான்கு பேர் கைது
காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அடுத்த கரசங்கால் பகுதியில் டிபன் கடை நடத்தி வருபவர் சுரேஷ். இவரது கடைக்கு நேற்று இரவு 2 பைக்கில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் சுரேஷிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அவர் கொடுக்க மறுத்ததையடுத்து கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த 3000 ரூபாய் பணத்தைப் பறித்துச் சென்றனர்.
இது குறித்து சுரேஷ் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கத்தி முனையில் பணப் பரிப்பில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போலீசார் விசாரணை செய்து தேடி வந்தனர்.
இந்நிலையில் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் ஆரம்பாக்கம் பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் படி அங்கு விரைந்த போலீசார் நான்கு பேரையும் மடக்கி பிடித்தனர்.
பின்னர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் சம்பவத்தில் ஈடுபட்டது ஏரிவாக்கம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (21), ஆத்தனஞ்சேரி பகுதியைச் சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் குமார் (23), கரசங்கால் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (24), ஏகாட்டூர் பகுதியைச் சேர்ந்த சூர்யா (39). என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை செய்ததில் சாலையில் செல்பவர்களிடம் கத்தியை காட்டிய மிரட்டி பணப்பரிப்பில் ஈடுபடுவதும், நான்கு பேர் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி போன்ற குற்ற வழக்குகள் இருப்பதும் போலீசாருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து நான்கு பேரிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனம், ஐந்து கத்தி வீச்சருவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments
Thank you for your comments