Breaking News

திமுகவின் கோப்புகள் ( DMK Files) - நாளை காலை 10:15 மணிக்கு வெளியாகும் - பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை

சென்னை: 

திமுகவின் ஊழல் பட்டியல் நாளை காலை 10.15 மணிக்கு வெளியிடப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


திமுகவின் இந்த ஆட்சிக்காலம் மட்டுமல்லாமல், கடந்த ஆட்சிக் கால ஊழல் பட்டியலும் சேர்த்து தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிடப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறி இருந்தார். 

இது தொடர்பாக கடந்த மாதம் தென்காசியில் நடந்த கட்சி கூட்டத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டிருந்தார். 

தி.மு.க. முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தற்போதைய அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் 27 பேரின் ஊழல் பட்டியல் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ந்தேதி வெளியிடப்படும். ரூ.2 லட்சத்து 23 ஆயிரம் கோடி அளவுக்கு அவர்கள் ஊழல் செய்து சொத்துக்களை குவித்துள்ளனர்.  வெளியிடப்படும் பட்டியல் எந்தளவு அதிர்ச்சியாக இருக்கப் போகிறது என்பது அனைவருக்கும் தெரியத்தான் போகிறது.  இதனை நான் வெளியிடும் போதுதான் தமிழ் மக்கள் அதனை புத்தாண்டாக கொண்டாடுவார்கள் என்றும் அண்ணாமலை பரபரப்பான தகவல்களை கூறி இருந்தார்.

மேலும், 2ஜி ஊழல் விசாரணையைக் கூட துரிதப்படுத்தி உள்ளோம் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இதன்படி நாளை (ஏப்ரல் 14) காலை 10.15 மணிக்கு இந்தப் பட்டியல் வெளியிடப்படும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து  இன்று காலை 9.37 மணி அளவில் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் ,   

"திமுகவின் கோப்புகள் ( DMK Files) - நாளை காலை 10:15 மணிக்கு வெளியாகும்" என்று தெரிவித்துள்ளார். அத்துடன் ஒரு சிறிய ப்ரோமோ வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதி மாறன், அமைச்சர் உதயநிதி, மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா, மு.க.அழகிரியின் மகன் துரை உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் ஏப்ரல் 14 காலை 10.15 மணி என்றும் அண்ணாமலை பதிவிட்டு உள்ளார். 

நாளை காலை டுவிட்டர் இணைய தளம் மூலமாக தி.மு.க.வினரின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்பதை அண்ணாமலை இன்றே அறிவித்திருப்பது அரசியல் களத்தில் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக பா.ஜ.க-வின் சில மூத்த தலைவர்கள் கூறியதாவது, ‘நாளை காலை 10:15 மணிக்கு ஊழல் பட்டியல் ரிலீஸ் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து 11 மணிக்கு இதுதொடர்பாக கமலாலயத்தில் அண்ணாமலை பிரஸ் மீட் கொடுப்பார்’ என்றனர்.

தி.மு.க ஊழல் பட்டியல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னமும் அண்ணாமலை சென்னை திரும்பவில்லை. அதே நேரம் ஊழலுக்கு எதிரான போரை தொடங்கியதற்கான அறிகுறியை வெளிப்படுத்தும் வகையில் மிகப்பெரிய அளவில் வில் அம்பு படத்துடன் பேனர் ஒன்று பா.ஜ.க அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 



No comments

Thank you for your comments