Breaking News

மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரின் நிதி அதிகாரங்கள் பறிப்பு

காஞ்சிபுரம் :

பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக வார்டு உறுப்பினர்கள் அளித்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரின் நிதி அதிகாரங்கள் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.



காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மாத்தூர் ஊராட்சியில் 2000க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. 



இந்த நிலையில் ஊராட்சியில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டது, குடிநீர் குழாய் புதைப்பு, மற்றும் தெரு மின்விளக்கு, ப்ளீச்சிங் பவுடர் வாங்குவது உள்ளிட்டவற்றில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக வார்டு உறுப்பினர்கள் ஆறு பேரும் ஊராட்சி தலைவர் கோபி துணைத் தலைவர் ஆறுமுகம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.



வார்டு உறுப்பினர்கள் அளித்த மனு மீது விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மற்றும் அதிகாரிகள் ஊராட்சி நிதியில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் கோபி, துணைத் தலைவர் ஆறுமுகம் ஆகியோரின் பண பரிவர்த்தனை செய்யும் நிதி அதிகாரம் தற்காலிகமாக மறு உத்தரவு வரும் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஆதனூர் ஊராட்சி தலைவர் ஆகியோரின் நிதி ஆதாரங்கள் பறிக்கப்பட்டு அவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவற்றை ரத்து செய்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ஓர் ஊராட்சியின் தலைவர் மற்றும் துணை தலைவர்களின் நிதி அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவினால் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் துணை தலைவர் கலக்கத்தில் இருந்து வருகின்றனர்.

No comments

Thank you for your comments