ஜி-ஸ்கொயர் நிறுவன அலுவலகங்களில் வருமான வரித் துறை சோதனை
சென்னை:
ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்துவரும் ஜி-ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் திங்கள்கிழமை அதிகாலையில் தொடங்கி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.
ஜி ஸ்கொயர் நிறுவனம் தென் மாநிலங்களில் கட்டுமானங்களில் முன்னனி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தமிழகத்தில் முக்கிய இடங்களில் வீடுகளை கட்டி விற்பனை செய்து வருகிறது.
இந்த நிறுவனத்திற்கு மட்டுமே சிஎம்டிஏ சார்பாக வீடுகள் கட்ட உடனடியாக அனுமதி வழங்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஜி ஸ்கொயர் நிறுவனம் மீது குற்றம் சாட்டியிருந்தார்.
அவர் கூறுகையில், ஜி ஸ்கொயர் முன்னேற்ற கழகமாக சிஎம்டிஏ மாறி இருக்கிறது, பொதுவாக நிலம் அப்ரூவல் ஆக 200 நாட்கள் ஆகும். ஆனால், கோவையில் 125 ஏக்கர் நிலத்திற்கு எட்டு நாட்களிலேயே டிடிசிபி மத்திய அரசின் ரேரா உட்பட அனைத்து அனுமதியும் கிடைத்திருக்கிறது.
முதல்வரின் உறவினர்கள் பலரும் இந்த அமைப்புகளில் வந்துவிட்டார்கள். ஆன்லைன் மூலம் மட்டுமே நிலத்துக்கு அப்ரூவல் வழங்கப்படும் என திமுக அரசு தெரிவித்திருந்தது. எப்போதெல்லாம் ஜி ஸ்கொயர் ஆவணங்களை சமர்ப்பிக்கிறார்களோ அதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக மட்டுமே இந்த லிங்க் ஓபன் ஆகும் நிலை இருப்பதாக தெரிவித்தார்.
குறிப்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் (14-04-2023) இந்த நிறுவனம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன், இந்நிறுவனத்துடன் திமுகவின் முக்கியப் பிரமுகர்களுக்குத் தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்தப் பின்னணியில் ஜி-ஸ்கொயர் நிறுவனத்தின் அலுவலகங்கள், அந்நிறுவன நிர்வாகிகளின் இடங்களில் அதிகாலை தொடங்கி வருமான வரித் துறையினரின் சோதனை தீவிரமாக நடந்து வருவது கவனிக்கத்தக்கது.
சென்னையில் சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை, ஆழ்வார்பேட்டை, திருச்சி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோல் கர்நாடகா மற்றும் தெலங்கானாவிலும் உள்ள ஜி-ஸ்கொயர் நிறுவனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒரே நேரத்தில் அதிக அளவு நிலங்களைக் கையகப்படுத்தியதாகவும், குறைந்த காலக்கட்டத்தில் அதிக வருமானம் ஈடுட்டியதாகவும் ஜி-ஸ்கொயர் நிறுவனம் மீதான புகாரின் அடிப்படையில் இந்த வருமான வரிச் சோதனை நடைபெற்று வருதாக தெரிகிறது.
இதனிடையே, தங்கள் நிறுவனம் மீது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்வைத்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், அண்ணாமலையின் இந்தக் குற்றச்சாட்டுகளால் பல ஆண்டு உழைப்பில் பெறப்பட்ட தமது வாடிக்கையாளர்களின் நம்பிக்கை சிதைக்கப்பட்டுள்ளதாகவும் ஜி-ஸ்கொயர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், தங்களது நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.38,000 கோடி என அண்ணாமலை வெளியிட்ட தகவல் தவறு என்றும், தங்களது கட்டுமானத் திட்டங்கள் பலவும் பிற நிறுவனங்களின் கூட்டு முயற்சியோடு செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் ஜி-ஸ்கொயர் தெரிவித்துள்ளது.
No comments
Thank you for your comments