Breaking News

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் பத்திரிகையாளர் நல வாரியத்தின் நான்காவது கூட்டம்

சென்னை :

செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் தலைமையில் இன்று (30.03.2023) சென்னை, தலைமைச் செயலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பத்திரிகையாளர் நல வாரியத்தின் நான்காவது கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பத்திரிகையாளர் ஓய்வூதியம் கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களும் மற்றும் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டன. 

மேலும், பத்திரிகையாளர் நல வாரியத்தின் புதிய உறுப்பினர் அட்டைகள், வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குவது குறித்தும் மற்றும் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பொருண்மைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

செய்தித் துறை அமைச்சர் அவர்கள் பத்திரிகையாளர் நல வாரியக் கூட்டத்தில் பேசியதாவது,

"மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய தொலைநோக்குத் திட்டமான பத்திரிகையாளர் நல வாரியம் தொடங்கப்படும் என்று அறிவித்தது மட்டுமல்லாமல், விரைவாக அதை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்ற அவர்களுடைய ஆணைக்கிணங்க பத்திரிகையாளர் நல வாரியம் தொடங்கப்பட்டு. இன்று நான்காவது கூட்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

🔥 Also Read : என்ஜேயூ தலைவர் டாக்டர் கா.குமார் செய்தித்துறை அமைச்சரிடம் கோரிக்கை

இதற்கு முன்பாக நடைபெற்ற கூட்டங்களிலும், இன்று நடைபெற்று வரும் கூட்டத்திலும் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது. இக்கூட்டத்தில் விளக்கமாக முடிவு செய்திருக்கிற அல்லது கவனத்திற்கு வந்திருக்கிற பிரச்சனைகளை மிக ஆழமாக அதைப்பற்றி அறிந்து கலந்துபேசி, அதே நேரத்தில் ஆய்வு செய்து அதை நடைமுறைக்கு விரைவாக கொண்டுவர வேண்டும். 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்ததோடு அவர்களுக்கான நலத்திட்டங்கள் விரைவாக போய்ச் சேர வேண்டும் என அக்கறையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாக அனைத்திலும் அவர் வேகமாக இருக்கிறார்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாக இருக்கின்ற பத்திரிகை நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதிலும் அக்கறையோடு இருக்கிறார். அதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் நான் கேட்டுக் கொள்கிறேன். பத்திரிகையாளர் நல வாரியம் தொடங்கப்பட்டு, இந்த ஓராண்டில் நான்கு முறை ஆய்வுக் கூட்டத்தை நடத்தி, அதிலே பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு கடைக்கோடி பத்திரிகையாளர் குடும்பத்திற்கு உதவிகள் போய்ச் சேருகின்றபோது உள்ளபடியே மகிழ்ச்சிக்குரியது" என்றார்.

முன்னதாக,  செய்தித் துறை அமைச்சர் அவர்கள், பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி திட்டத்தின் கீழ், பணிக்காலத்தில் மரணமடைந்த ஒரு பத்திரிகையாளர் குடும்பத்திற்கு மாண்புமிகு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.

இக்கூட்டத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் திரு.த.மோகன், இ.ஆ.ப., கூடுதல் இயக்குநர் (செய்தி) திரு.சிவ.சு.சரவணன், பத்திரிகையாளர் நல வாரியத்தின் அலுவல்சாரா உறுப்பினர்களான தினத்தந்தி குழுமத்தின் இயக்குநர் திரு.சிவந்தி ஆதித்யன் பாலசுப்பிரமணியன், தீக்கதிர் நாளிதழின் செய்தியாளர் திரு.எஸ்.கவாஸ்கர், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சிறப்புச் செய்தியாளர் திரு.எம்.ரமேஷ், அலுவல்சார் உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments