ஏரிகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி... உடனே விண்ணப்பிக்கலாம்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடை காலத்தில் ஏரிகளில் வண்டல் மண் எடுத்து விவசாய நிலங்களின் மண் வளத்தை மேம்படுத்த விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும், ஏரி வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா. ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடை காலத்தில் ஏரிகளில் வண்டல் மண் எடுத்து விவசாய நிலங்களின் மண் வளத்தை மேம்படுத்த விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும், ஏரி வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா. ஆர்த்தி, இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) கட்டுப்பாட்டில் 380 ஏரிகளும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை கட்டுப்பாட்டில் பெரிய ஏரிகள் 380 மற்றும் ஊரணி, குளங்கள் (சிறிய நீர்நிலைகள்) 2112 எண்கள் உள்ளன.
இந்த ஏரிகளில் கோடை காலத்தில் நீர் இருப்பு குறைவாக காணப்படும் போது விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு மண் வளம் மேம்படுத்த ஏரியில் இருந்து வண்டல் மண் அரசு நிர்ணயித்த அளவிற்கு எடுத்துக்கொள்ள (மாட்டு வண்டி / டிராக்டர்) அரசு விதிகளின்படி உத்தரவுகள் உதவி இயக்குநர், கணிம வளம், காஞ்சிபுரம் அவர்களால் வழங்கப்பட உள்ளன.
மேலும், விவசாயிகள் சுயமுகவரியிட்ட வெள்ளைத்தாளில் 1. நிலம் அமைந்துள்ள இடம் 2. எந்த ஏரியின் பாசன பரப்பு (ஆயக்கட்டு பகுதி) 3. மொத்த பரப்பளவு அதில் எத்தனை ஏக்கருக்கு வண்டல் மண் தேவை மற்றும் அளவு ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட்டு அத்துடன் விவசாயியின் ஆதார் எண், பட்டா நகல், ஏரி வண்டல் மண் எடுக்க பயன்படுத்தப்படும் டிராக்டர் வண்டி பதிவு எண் நகல் (RC Book Xerox) / மாட்டுவண்டி ஆகியவற்றை இணைத்து பெறப்படும் ஏரி வண்டல் மண் விவசாயத்திற்கு மட்டும் பயன்படுத்த என்ற உறுதிமொழியுடன் கையொப்பமிட்ட விண்ணப்பத்தினை கிராம நிர்வாக அலுவலரிடம் சமர்பித்து நில உடமை குறித்து சரித்தன்மை சான்று பெறப்பட்ட பின்னர் உதவி இயக்குநர், கணிம வளம், காஞ்சிபுரம் அவர்களுக்கும் மற்றும் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்திலும் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில் அந்தந்த ஏரியில் உள்ள நீர் இருப்பு அளவின் அடிப்படையில் எவ்வளவு ஏரி வண்டல் மண் (40%) எடுக்க முடியும் என்ற விவரம் கணக்கீடு செய்யப்பட்டு ஏப்ரல் 2023 முதல் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும். ஏரியில் இருந்து விளை நிலங்களுக்கு கொண்டு செல்லும் இயந்திரச்செலவினை விவசாயிகளே முழுமையாக ஏற்க வேண்டும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட அனைத்து நடைமுறைகளும் அரசின் வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்படும். விளை நிலங்களுக்கு என வழங்கப்பட்ட ஏரி வண்டல் மண் பிற பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது. பிற பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது தெரியவந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments