Breaking News

”மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ”மாபெரும் தமிழ்க் கனவு” தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியை  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்கள். 





காஞ்சிபுரம், பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் இன்று (17.03.2023) தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், சமூக சமத்துவத்தையும் பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும், காலம் தோறும் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த புரிதலையும், வளரும் தலைமுறையினருக்கு முழுமையாக கொண்டு சென்று சேர்ப்பதற்கு ”மாபெரும் தமிழ்க் கனவு”  தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியை  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து பேசியதாவது:



நமது மரபின் வளமையையும் பண்பாட்டின் செழுமையையும் சமூக சமத்துவத்தையும் பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் ஒரு மாபெரும் முயற்சி தமிழ்க் கனவு நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் 60 நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில், 1 இலட்சம் மாணவ/மாணவியர்கள் பங்கு பெறும் வகையிலும், பல்வேறு சொற்பொழிவாளர்கள் கொண்டு பல்வேறு தலைப்புகளில் குறிப்பாக தமிழரின் அறிவியல், தமிழகத்தில் நடந்த  உணவுப் புரட்சியும் சமூக மாற்றமும், தமிழர் மரபும் நாகரிகமும், சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப் பொருளாதார முன்னேற்றம், தமிழர் இரண்டாயிரமாண்டு  வரலாற்றுப் பயணம்,  மொழி - இலக்கியம், கலை பண்பாடு தொல்லியல் ஆய்வுகள், அறிவியல்  தொழில்நுட்பம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி தொழில் முனைவோருக்கான முன்னெடுப்புகள்-வாய்ப்புகள், கல்விப் புரட்சி அரசின் திட்டங்கள் அதைச் செயல்படுத்தும் முறைகள் ஆகிய தலைப்புகளில் கீழ் சிறந்த சொற்பொழிவாளர் கொண்டு மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி  நடத்தப்பட்டு  வருகிறது.  சொற்பொழிவாளர்  திரு ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் ”வள்ளலார் முதல் வள்ளுவர் வரை” என்ற தலைப்பிலும்  மற்றும் ஊடகவியலாளர்                    திரு.கார்த்திகைச்செல்வன் அவர்கள் ”கல்வி எனும் பெருஞ்செல்வம்” என்ற தலைப்பில் மாணவர்களிடம் உரையாற்றுகிறார்கள்.



மேலும் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு உயர்கல்வி,  வேலைவாய்ப்பு வழிகாட்டி மற்றும் தமிழ்ப் பெருமிதம் குறிப்பேடு வழங்கப்பட்டன. இவற்றை மாணவர்கள் படித்து பயன் பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து தமிழ் இலக்கிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்கள். மேலும் அரசின் பல்வேறு துறைகள் சார்பில், கல்வி வழிகாட்டல், மாணவர்கள் பயன்பெறும் வகையில் புத்தகக்காட்சி, நான் முதல்வன், புதுமைப்பெண், கல்விக்கடன், தொழில் முனைவோருக்கான அரசுத் திட்டங்கள், வங்கிக்கடன் வாய்ப்புகள், மகளிர் சுய உதவிக்குழுப்பொருட்கள் விற்பனை, சிறுதானியம் குறித்த முக்கியத்துவம் அடங்கிய பல்வேறு அரங்குகளையும், மாபெரும் தமிழ்க் கனவு குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் உருவாக்கப்பட்ட காணொலியையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்கள்.



இந்நிகழ்ச்சியில் சொற்பொழிவாளர்கள் திரு.ஸ்டாலின் குணசேகரன், ஊடகவியலாளர்          திரு.கார்த்திகைச்செல்வன், ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்                         திரு.வெங்கடேசன்,  கல்லூரி  பேராசிரியர்கள்  மற்றும் கல்லூரி மாணவ/ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.






No comments

Thank you for your comments