Breaking News

காஞ்சிபுரத்தில் பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டம் – என் பாலிசி என் கையில் இயக்கத்தின் தொடக்க விழா நடைபெற்றது..

 காஞ்சிபுரத்தில் பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டம் – என் பாலிசி என் கையில் இயக்கத்தின் தொடக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், இன்று (15.02.2023) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்ற பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் – என் பாலிசி என் கையில் இயக்கத்தின் தொடக்க விழா நடைபெற்றது. 

இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காப்பீடு செய்த 50 விவசாயிகளுக்கு பாலிசி விநியோகம் வழங்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது. ஆகவே, பயிர் காப்பீடு செய்த கடன் பெற்ற விவசாயிகளுக்கு பஜாஜ் அலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் இல்லம் தேடி பாலிசி விநியோகம் செய்யப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய பயிர்களாக நெல், உளுந்து, நிலக்கடலை, கரும்பு ஆகியவை  அதிகப்படியான பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இப்பயிர்களில் நெல்பயிர் முதன்மை பயிராக சொர்ணவாரி, சம்பா, நவரை ஆகிய மூன்று பருவங்களிலும் ஆண்டுதோறும் 1,20,000 – 1,35,000 ஏக்கர் பரப்பளவில் பயிர்சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 

புயல், மழை,வெள்ளம் மற்றும் கடும் வறட்சி போன்ற பேரிடர் காலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களில் மகசூல் இழப்பீடு ஏற்படும்போது விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க திருந்திய பிரதம மந்திரி  பயிர்காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்வதன் மூலம் பொருளாதார இழப்பில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

ஆகவே, ஒவ்வொரு ஆண்டும் கடன் பெற்ற / கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் பருவம் வாரியாக பயிர் காப்பீடு செய்ய மாவட்டஆட்சித்தலைவர் அவர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டது. 

பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகளுக்கு கிராம அளவில் பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொண்டு விளிம்பு மகசூலைவிட (Threshold Yield) உண்மையான மகசூல் குறைவாக கிடைக்கும் பட்சத்தில் சதவீத அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படுகிறது.

2021 – 2022 ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெல், கடலை, உளுந்து மற்றும் கரும்பு பயிர்களில் பயிர் காப்பீடு செய்துள்ள 13340 விவசாயிகளுக்கு 19.50 கோடி (ரூபாய் பத்தொன்போது கோடி ஐம்பது லட்சம்) மகசூல் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. 

நடப்பு 2022 – 2023 ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பயிர்காப்பீடு செய்ய பஜாஜ் அலையன்ஸ் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிறுவனத்தின் மூலம் நெல், சம்பா மற்றும் நவரை பருவத்தில் மொத்தம் 11528 விவசாயிகள் 25666 ஏக்கர் பயிர் காப்பீடு செய்துள்ளனர். இது தவிர, ரபி பருவபயிர்களான நிலக்கடலை, கரும்பு ஆகியவற்றில் 64 விவசாயிகள் 136 ஏக்கரில் பயிர் காப்பீடு செய்துள்ளனர்.

சம்பா பருவத்தில் பயிர்காப்பீடு செய்துள்ள பரப்பளவில் நெல் பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மகசூல் இழப்பீடு கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

அதே போன்று நவரை மற்றும் ரபி பருவபயிர்களுக்கு கிராம அளவில் பயிர் அறுவடை பரிசோதனை இம்மாதம் இறுதியில் தொடங்கி நடப்பு பசலி 1433 – க்குள் முடிக்கப்பட்டு மகசூல் இழப்பீட்டின் சதவீத அடிப்படையில் பயிர்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீடு தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில் வேளாண் இணை இயக்குநர் திரு.இளங்கோவன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.கணேசன் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்துக் கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments