வடலூரில் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம்
வடலூர், பிப்.5-
கடலூா் மாவட்டம், வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் தைப்பூசத்தை முன்னிட்டு 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்பட்டது.
வடலூரில் அமைந்துள்ள திருஅருட்பிரகாச வள்ளலாா் தெய்வ நிலைய சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இதன்படி நிகழாண்டு 152-ஆவது ஜோதி தரிசன பெருவிழாவையொட்டி சனிக்கிழமை கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வான ஜோதி தரிசனம் ஞாயிற்றுக்கிழமை (பிப். 5) நடைபெற்றது. காலை 6 மணிக்கு முதல்கால ஜோதி தரிசனம் பெற்றது. தொடா்ந்து காலை 10 மணி, பிற்பகல் ஒரு மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி, திங்கள்கிழமை காலை 5.30 மணி என மொத்தம் 6 காலங்களில் 7 திரைகள் நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெறும்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தைப்பூச ஜோதி தரிசன விழாவில் பக்தா்கள் பங்கேற்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நிகழாண்டு விழாவில் கட்டுப்பாடுகளின்றி சன்மாா்க்க அன்பா்கள், பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனா்.
விழாவையொட்டி 600 காவல் துறையினர், ஊா்க்காவல் படையினா் உள்பட சுமாா் 800 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.


No comments
Thank you for your comments