சரித்திர பதிவேடு ரவுடியை 2 வருடம் 3 மாதத்திற்கு சிறையில் அடைக்க கோட்டாட்சியர் உத்தரவு
சேலம் மாவட்டம், மேட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (33) த/பெ. பழனிச்சாமி. இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளது.
இவர் மீது மேட்டூர் காவல் நிலையத்தில் ரவுடி சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இவர் முன்னதாக குண்டர் தடுப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவர் மேலும் குற்றச்செயல்களில் ஈடுபட மாட்டேன் என்று மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் மூன்றாண்டுகளுக்கு பிணை பத்திரம் எழுதி கொடுத்து இருந்தார்.
இந்நிலையில் கடந்த 30.11.22 அன்று மேட்டூர் நகராட்சி உறுப்பினர் வெங்கடாசலம் என்பவரை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.
மேற்படி வழக்கில் கடந்த 4.12.22 அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் நன்னடத்தைக்கான பிணை பத்திரம் எழுதிக் கொடுத்துவிட்டு மேற்படி கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டதால் மேட்டூர் காவல் ஆய்வாளர் அவர்கள் விதி மீறல் தொடர்பாக மேட்டூர் கோட்டாட்சியர் அவர்களுக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் இன்று (30.1.23) மேட்டூர் கோட்டாட்சியர் அவர்கள் பிணைப் பத்திரத்தில் மீதம் இருந்த 2 வருடம் 3 மாதத்திற்கு சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாலே ஒரு வருடம் மட்டும் சிறையில் இருக்க வேண்டிய நிலையில் மேற்படி பிணை பத்திர விதிமீறலில் ஈடுபட்டதால் இரண்டு வருடத்திற்கு மேல் சிறையில் அடைக்க உத்தரவு பெற்ற மேட்டூர் காவல்துறையினருக்கு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. R. சிவக்குமார் IPS அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்.

No comments
Thank you for your comments