தமிழர்களின் வீரம், அறம், ஈரத்தை சொல்லும் "மாவீரா" படப்பிடிப்பு விருத்தாசலம் அருகே தொடக்கம்!
சந்தன வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து 'சந்தனக்காடு' தொலைக்காட்சி தொடரை இயக்கியவர் இயக்குனர் கவுதமன். மண் மணமிக்க திரைப்படங்களை தமிழுக்கு தந்துள்ள படைப்பாளியான வ.கௌதமன், "கனவே கலையாதே" "மகிழ்ச்சி" திரைப்படங்களுக்கு பிறகு கதை, திரைக்கதை எழுதி இயக்கும் படத்திற்கு "மாவீரா" என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
வி.கே புரடக்க்ஷன் குழுமம் தயாரிக்கும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூரலிகான், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, ஆடுகளம் நரேன், தீனா, கிங்ஸ்லி உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
"கவிப்பேரரசு" வைரமுத்து உணர்வுமிக்க பாடல்களை எழுதுகிறார். ஒளிப்பதிவை வெற்றிவேல் மகேந்திரன் கையாள்கிறார். வசனங்களை பாலமுரளி வர்மன் தீட்ட, கலை இயக்கத்தை மாயப்பாண்டியும், சண்டைப் பயிற்சியை "ஸ்டண்ட்" சில்வாவும், படத்தொகுப்பை ராஜாமுகமதுவும், மக்கள் தொடர்பை நிகில் முருகனும் கவனிக்கிறார்கள்.
வி.கே புரடக்க்ஷன் குழுமம் தயாரிக்கும் மாவீரா திரைப்படத்தின் திரைப்பட தொடக்க விழா "கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள விஜயமாநகரம் முனீஸ்வரன் கோயிலில் நடைபெற்றது. தமிழர்களின் வழிபாட்டோடும், வரலாற்றோடும், வாழ்வோடும் பின்னிப்பிணைந்த தமிழ்க்கடவுள் முருகன், வள்ளலார், வள்ளுவர் ஆகியோர் படங்களுக்கு வழிபாடு செய்து படப்பிடிப்பு தொடங்கியது.
சிதம்பரம் நகர மன்ற முன்னாள் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், தொழிலதிபர் வி.கே.டி.பாலன், தமிழ்நாடு அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரிகள் ஆசிரியர் சங்கம் மாநில தலைவர் மணிவாசகம், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலக சங்க முன்னாள் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி, பா.ம.க மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் எஸ்.கே.தனபால் மற்றும் வி.கே புரொடக்சன் குழும நிர்வாக தயாரிப்பாளர்கள் உமாதேவன், குறளமுதன், கிரியாடெக் பாஸ்கர், திருப்பத்தூர் தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
நடிகர்கள் சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், தமிழ் கௌதமன் மற்றும் பா.ம.க மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், விஜயமாநகரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல், வன்னியர் சங்க மாவட்ட துணை தலைவர் வெற்றிவேல், விருதை வி.கே மார்ட் தலைமை ஒருங்கிணைப்பாளர் தட்சிணாமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர்கள் சரவணகுமார், பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தத் திரைப்படம் குறித்து இயக்குனர் வ.கௌதமன் கூறும் போது,
இப்படம் தமிழர்களின் தொன்மைமிக்க வீரம், அறம், ஈரத்தை சொல்வதோடு படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் தங்களை திரைப்படத்தோடு தொடர்பு படுத்தி கொள்ள செய்யும் வகையில் அனைத்து தரப்பினரையும் கவரும் மண்ணதிரும் ஒரு மாபெரும் வெற்றிப்படைப்பாக இருக்கும்.
என் வாழ்நாள் லட்சியமே தமிழர்களின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத சந்தனக்காடு, முந்திரிக்காடு, வன்னிக்காடு பகுதிகளில் வாழ்ந்த மாவீரர்களின் வரலாற்றை இவ்வுலகிற்கு ஒரு தரிசனமாக, சமரசமில்லா படைப்பாக்கி தருவது மட்டும் தான். சந்தனக்காட்டு மாவீரன் வீரப்பனை படைத்துவிட்டேன். இது முந்திரிக்காட்டில் வாழ்ந்த மாவீரர் ஒருவருடைய வாழ்க்கை வரலாறாகும். அடுத்து வன்னிக்காடு மட்டுமே மீதமுள்ளது.
"அத்து மீறினால் யுத்தம்" என்கிற இலக்கோடு மண்ணையும் மானத்தையும் காத்த ஒரு மாவீரனின் வீரவரலாறே "மாவீரா" திரைப்படம். தமக்கு மேலானவர்கள் யாரும் இல்லை, கீழானவர்கள் யாரும் இல்லை என்ற சமத்துவத்தோடு எல்லா மக்களையும் சமமாக பாவித்த அதே சமயத்தில் 'அத்துமீறி மீறினால் யுத்தம்' என்கிற இலக்கோடு மண்ணையும் மானத்தையும் காத்த ஒரு மாவீரனின் வாழ்க்கை வரலாறு இது. இந்தப் படம் வெளியான பிறகு வடதமிழ்நாட்டில் எதிர் எதிரெதிரான மனநிலையில் இருக்கும் இரு சமூகங்கள் ஆரத்தழுதி அரவணைக்க நினைக்கும் படியாக இருக்கும்" என்றார்.

No comments
Thank you for your comments