திட்ட இயக்குனரை கண்டித்து ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்..!
காஞ்சிபுரம் :
தரக்குறைவாக பேசிய மாவட்ட ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனரை கண்டித்து ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு செய்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், உள்ளிட்ட ஐந்து ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
கிராம ஊராட்சி மன்றங்களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்ட பணிகள் அனைத்தும் ஊரக வளர்ச்சி துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் மேற்பார்வையில் வட்டார வளர்ச்சி அலுவலர்களின் கட்டுப்பாட்டில் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சி மன்றங்களில் அரசு நல திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பில் இருளர் பழங்குடியின குடியிருப்பு வீடுகள் கட்டும் பணி ஊத்துக்காடு, சிங்காடிவாக்கம், குண்டு குளம், மலையாங்குளம், உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை தமிழக அமைச்சர்கள் ஆய்வு செய்ய வருகை தந்தனர். அமைச்சர்கள் ஆய்வுக்கு முன்னதாக பணி நடைபெறும் இடத்திற்கு சென்ற மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, கட்டிடம் கட்டும் பணிகளை பார்வையிட்டு தரம் குறைவாக பணிகளை செய்து வரும் ஒப்பந்ததாரரை அழைத்து கண்டித்தார்.
இந்நிலையில் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் பணிகள் நடைபெற்று வருவதால் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி தனக்கு கீழ் பணி புரியும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களை ஒருமையில் திட்டி கொன்று புதைத்து விடுவேன் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.
திட்ட இயக்குனரின் செய்கையால் அதிர்ச்சி அடைந்த ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், இன்று தங்கள் பணிகளை புறக்கணித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தரக்குறைவாக பேசிய திட்ட இயக்குனர் ஸ்ரீதேவியை கண்டித்து மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதிலும் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு அலுவலர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

.jpg)

No comments
Thank you for your comments