திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை:
திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்சிராப்பள்ளி, அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,
"புதிய புதிய துறைகளில் தமிழ்நாடு முதலீடுகளை ஈர்த்து வருகிறது; மற்ற மாநிலங்களிலிருந்து மட்டுமல்ல பல்வேறு நாடுகளிலிருந்தும் தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வருகின்றன.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு கோடியாவது பயனாளியை சந்திக்க உள்ளேன்; மக்களுக்கு வீட்டுக்கே சென்று சிகிச்சை அளிக்க கூடிய மகத்தான திட்டம்தான் மக்களை தேடி மருத்துவம் திட்டம். விமர்சனத்துக்கு தனது செயல்பாடுகளால் பதில் சொல்லி அனைவரது பாராட்டையும் பெறுபவர் உதயநிதி; விளிம்பு நிலை மக்களை மேம்படுத்தும் துறைகள் உதயநிதியிடம் வழங்கப்பட்டுள்ளது.திருச்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும்.
ஒலிம்பிக் போன்ற பன்னாட்டு அளவிலான போட்டிகளுக்குத் தமிழ்நாட்டு இளைஞர்கள் தயாராகவே ஒலிம்பிக் அகாடமி. உலகத் தரம் வாய்ந்த பயிற்சி வழங்கக்கூடிய வகையில் தமிழ்நாட்டில் 4 ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்பட உள்ளன.
பெண்கள் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்க திமுக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் 4,38,000 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் உள்ளன. 50,24,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்க முதல்முறையாக முனைப்பு காட்டியது திமுக அரசு தான். இந்தியாவில் முதல்முறையாக மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அமைத்தவர் தலைவர் கருணாநிதிதான். மகளிர் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதை அரசின் கடமையாகவும், பொறுப்பாகவும் நினைக்கிறோம்; சிறப்பாக செயல்படும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு மணிமேகலை விருது வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டையும், தமிழர்களையும் செழிக்க வைப்பதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம்." இவ்வாறு முதல்வர் பேசினார்.
No comments
Thank you for your comments